பிரிட்டனைச் சேர்ந்த ஜோனதனுக்கு (41) அளவுக்கு அதிகமான தாக உணர்வு ஏற்பட்டிருந்ததன் பின்னணியில், அவரது மூளையில் ஏற்பட்ட கட்டியே காரணமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு பத்து லிட்டர் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காமல், எப்போதுமே கடுமையான தாக உணர்வோடு தவித்து வந்துள்ளார் ஜோனதன். மருத்துவர்களை ஆலோசித்த போது, இது நீரிழிவின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம் என்றார்கள்.
ஆனால் அதுவும் இல்லை என்பது மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்த பிறகு, அவருக்கு நடத்தப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் மூளையில் கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, மூளையில் பிட்யூட்டரி சுரப்பிக்கு அருகே இந்த கட்டி இருந்துள்ளது. இந்த பிட்யூட்டரி சுரப்பிதான், உடலுக்கு நீர்ச்சத்து தேவையா என்பதை கண்டறிந்து தாக உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால பிட்யூட்டரி சுரப்பிக்கு அருகே இருந்த இந்தக் கட்டியால் இந்த சுரப்பி தாறுமாறாக வேலைசெய்ய ஆரம்பித்து, இவர் நாள்தோறும் 10 லிட்டர் தண்ணீர் குடிக்கக் காரணமாகியிருக்கிறது.
இவ்வளவு தண்ணீரையும் குடித்துவிட்டு பிறகு எப்படி நான் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும் என்று அவர் தனக்கு ஏற்பட்ட மிக மோசமான பிரச்னையை எடுத்துரைக்கிறார்.
பிறகு அவருக்கு தொடர்ந்து கண் பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்யப்பட்டதில்தான் மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கு 30 சுற்று ரேடியோ தெரப்பி மற்றும் ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொண்டபிறகு கட்டி முற்றிலும் நீங்கிவிட்டதாகவும், ஆனால், ஸ்டீராய்டு மருந்துகளின் விளைவால் தனது உடல் அதிக எடை போட்டுவிட்டதாகவும், அதனைக் கட்டுப்படுத்த தற்போது பயிற்சிகள் எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை வெளி உலகத்துக்குச் சொல்ல வேண்டும் என்றும், இதன் மூலம் மனிதர்கள் தங்களுக்கு ஏற்படும் விசித்திரமான அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டாம், அதனை கவனித்து, அதற்கான காரணியை கண்டறிந்தால் மிகப் பயங்கர நோயையும் முதலிலேயே கண்டறிந்து குணப்படுத்திவிடலாம் என்பதே உலக மக்களுக்கு ஜோனதன் சொல்ல வரும் செய்தியாம்.