ரஷியாவின் சைபீரியாவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ரஷியாவின் அவசரகால அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: எம்ஐ-8 ஹெலிகாப்டர் தெற்கு சைபீரியாவில் உள்ள அல்டாயில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது மின்கம்பியில் உரசியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்றனர்.
இதையும் படிக்க: அயோத்தியில் சிலை பிரதிஷ்டை: பிரதமர் மோடிக்கு அழைப்பு!
இந்த விபத்து தொடர்பாக ரஷிய ஊடகம் சார்பில் தெரிவித்ததாவது: விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் தனியார் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்ததாகும். இந்த ஹெலிகாப்டரில் சுற்றுலாவுக்காக குழு ஒன்று பயணம் செய்துள்ளது. ஹெலிகாப்டரில் மொத்தமாக எத்தனை பேர் பயணித்தனர் என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளது.
எம்ஐ-8 ஹெலிகாப்டர் 1960-களில் வடிவமைக்கப்பட்ட இரட்டை என்ஜின் ஹெலிகாப்டர் ஆகும். இந்த ஹெலிகாப்டர் ரஷியாவில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த எம்ஐ-8 ஹெலிகாப்டரில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.