ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டில், செவ்வாய்க்கிழமை இரவு பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 32 பேர் பலியாகினர். 85 பேர் காயமடைந்தனர்.
ஆனால், ஒரே வழித்தடத்தில் எவ்வாறு எதிர் எதிர் திசையில் ரயில்ககள் வந்தன என்பது ரயில்வே அதிகாரிகளுக்கு மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
பயணிகள் ரயில் ஒன்றும், எதிர் திசையில் வந்த சரக்கு ரயிலும் எதிர்பாராதவகையில் நேருக்கு நேர் மோதின. ரயில்கள் மோதிய வேகத்தில் ரயில் பெட்டிகளில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த வந்த தீயணைப்புத் துறையினர், ஏராளமான பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பயணிகளும், அக்கம் பக்கத்தினரும் விபத்து நடந்த போது எழுந்த சப்தத்தால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல பயணிகள் ரயில்களின் இடிபாடுகளிலிருந்து வெளியே குதித்துத் தப்பியுள்ளனர்.
எல்லா பக்கமும் தீ பற்றி எரிகிறது. எங்குப் பார்த்தாலும் ஒயர்கள் தொங்குகின்றன. எங்கேச் செல்வது என்று தெரியவில்லை. உயிர் தப்பிக்க வெளியே குதிப்பது மட்டுமே ஒரே வழி என்று குதித்து உயிர் தப்பியதாக பயணிகள் பலரும் கூறுகிறார்.
ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்களும் எதிரெதிர் திசையில் வந்ததே இந்த கோர விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இரண்டு ரயில்களுமே மிக அதிக வேகத்தில் வந்ததால், எதிர் திசையில் வரும் ரயிலை மிக நெருக்கத்தில்தான் ஓட்டுநர்கள் கவனித்திருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.