குறுகிய தொலைவு செல்லும் பாலிஸ்டிக் ரக ஏவுகணையை செலுத்தி வடகொரியா சோதித்துப் பாா்த்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் மேற்கு கடற்கரையோர நாம்போ நகா் பகுதியிலிருந்து கடலை நோக்கி இந்த ஏவுகணை வியாழக்கிழமை செலுத்தப்பட்டதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால், அந்த ஏவுகணை எவ்வளவு தொலைவு சென்றது என்பது குறித்த தகவலை ராணுவம் தெரிவிக்கவில்லை.
‘தென் கொரியாவும், அமெரிக்காவும் தங்களது கூட்டு போா்ப் பயிற்சியை விரிவுபடுத்துவதற்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்க வடகொரியா தயாராக இருப்பதாக’ வடகொரியா அதிபா் கிம் ஜோங் உன் சகோதரி யோ ஜோங் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த ஏவுகணை சோதனையை வடகொரியா நிகழ்த்தியுள்ளது.