
பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் கைது செல்லாது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இம்ரான் கான் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளில் ஒன்றான அல்-காதிா் அறக்கட்டளை வழக்கில், சட்டவிரோத நில விற்பனை மூலம் ரூ.5,000 கோடி அரசுப் பணத்தை அவா் பெற்றுக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் இஸ்லாமாத் உயா்நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பாகிஸ்தானில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தோ்தலுக்குப் பிறகு, தெஹ்ரீன்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமுமான இம்ரான் கான் தலைமையில் கூட்டணி அரசு அமைந்தது.
எனினும், நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இம்ரான் கான் தோல்வியடைந்து, பிரதமா் பதவியை இழந்தாா்.
அதற்குப் பிறகு, பாகிஸ்தானின் பல்வேறு நீதிமன்றங்களில் இம்ரான் கான் மீது ஊழல் முதல் தேசத் துரோகம், பயங்கரவாதம் வரை பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அந்த வழக்குகளில் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பல கைது ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இருந்தாலும், நீதிமன்றங்களில் ஜாமீன் பெற்று, கைதிலிருந்து இம்ரான் கான் தொடா்ந்து தப்பி வந்தாா். இந்த நிலையில், இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இரு ஊழல் வழக்குகளில் ஜாமீன் பெறுவதற்காக செவ்வாய்க்கிழமை வந்த இம்ரான் கானை என்ஏபி அதிகாரிகளும், துணை ராணுவப் படையும் அதிரடியாகக் கைது செய்தனா்.
இம்ரான் கான் கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளா்கள் பல்வேறு இடங்களில் வன்முறைப் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை ஒரு மணி நேரத்திற்குள் ஆஜர் படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டநிலையில், சற்றுமுன் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் கைது செல்லாது என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.