அடுத்த வாரம் இஸ்ரேல் செல்கிறார் எலான் மஸ்க்!

எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் அடுத்த வாரம் இஸ்ரேலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த வாரம் இஸ்ரேல் செல்கிறார் எலான் மஸ்க்!


டெல் அவிவ்: எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் அடுத்த வாரம் இஸ்ரேலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அப்போது அவர் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸால் தாக்கப்பட்ட காஸா எல்லைக்கு அருகிலுள்ள நகரங்களுக்குச் செல்வார் என்று ஹீப்ருவை மேற்கோள் காட்டி ஜெருசலேம் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 

மஸ்க் தனது பயணத்தின் போது இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்கவுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வார தொடக்கத்தில், எக்ஸ் சமூக வலைதள பதிவில்,  எக்ஸ் சமூக வலைதளத்தின் விளம்பர வருவாய் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் அனைத்து வருமானத்தையும், போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல், காஸா மருத்துவமனைகள் அங்குள்ள செஞ்சிலுவைச் சங்கம், கிரசன்ட் ஆகியவற்றிற்கு நன்கொடையாக அளிப்பதாக மஸ்க் அறிவித்தார்.

மற்றொரு பதிவில், "நிதி எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பதை நாங்கள் கண்காணிப்போம் மற்றும் செஞ்சிலுவை, பிற சேவை நிறுவனங்களிடம் இருந்து சிறந்த யோசனைகள் வரவேற்கப்படுகின்றன. இனம், மதம் அல்லது வேறு எதையும் பொருட்படுத்தாமல் அப்பாவிகள் குறித்தே கவலைப்பட வேண்டும்." என்று தெரிவித்திருந்தார்.

கடந்த மாதம், இஸ்ரேல் தாக்குதலில் காஸாவின் தொலைத்தொடர்பு கேபிள் துண்டிக்கப்பட்டு இருந்த நிலையில், எலான் மஸ்க் தனது லட்சியமான புதிய ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள் மூலம் காஸா பகுதிக்கு இணைய சேவை வழங்க விரும்புவதாகக் கூறியிருந்தார், இது தகவல் தொடர்பு அமைச்சர் ஷ்லோமா கர்ஹி உட்பட இஸ்ரேலிய அதிகாரிகளிடையே கோபத்தை தூண்டியது. 

கர்ஹி அவ்வாறு செய்ய முயற்சிக்கும் எந்த நடவடிக்கையையும் எதிர்த்துப் போராடுவதாகக் கூறினார், இருப்பினும் காஸாவிற்கு ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவை வழங்கப்பட்டால், அது முற்றிலும் மனிதாபிமான காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டது என்பதை உறுதிப்படுத்த நிறுவனம் "அசாதாரண நடவடிக்கைகளை" எடுக்கும் என்று மஸ்க் வலியுறுத்தினார். 

ரஷியா - உக்ரைன் போரின் போதும் ஸ்டார் லிங்க் மூலம் எலான் மஸ்க் இணைய சேவையை வழங்கியிருந்தார். 

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் குழுவினற்கும் இடையில் தொடங்கும் நான்கு நாள் போர் நிறுத்தத்தின் முதல் நாள் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது, இதில் பணயக்கைதிகள், பாலஸ்தீனிய கைதிகள் மற்றும் காஸா பகுதிக்குள் நுழையும் முக்கியமான மனிதாபிமான உதவிகள் விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com