இத்தாலி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பெண்களின் மீதான வன்முறைகள் தொடர்பான விவகாரத்தில் தங்களின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு கால்பந்தாட்ட வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்கள் முகங்களில் சிவப்பு குறியிட்டுள்ளனர்.
நவ.25 (சனிக்கிழமை) பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பிற்கான சர்வதேச தினத்தையொட்டியும், 22 வயதான பல்கலைக்கழக மாணவி அவரது காதலரால் கொல்லப்பட்ட சம்பத்தையொட்டியும் நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
வெனிஸ் பகுதியைச் சேர்ந்த கியூலியா செச்சடின், அவரது முன்னாள் காதலரால் கொலை செய்யப்பட்டார். ஒரு வாரம் முன்னதாக காதலருடன் வெளியே சென்ற கியூலியா மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. அவரது உடல் பல காயங்களோடு ஏரிக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது.
அவரைக் கொலை செய்த முன்னாள் காதலரை ஜெர்மனியில் கைது செய்துள்ளனர்.
இத்தாலியில் சராசரியாக மூன்று நாள்களுக்கு ஒரு பெண் கொல்லப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தக் குற்றங்களில் பெரும்பாலும் பெண்களின் கணவர்கள், காதலர்களே காரணமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இத்தாலி கால்பந்தாட்ட கழகங்களுக்கிடையே நடக்கும் சீரி ஏ லீக் தொடரில் விளையாட்டு வீரர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: காஸாவில் 2-ஆவது நாளாக சண்டை நிறுத்தம்
முகத்தில் சிவப்பு குறியிடுவதை ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை போட்டிகளிகளிலும் தொடரவுள்ளனர். இந்த முன்னெடுப்பு, வன்முறைக்கு எதிரான ரெட் கார்ட் என குறிப்பிடப்படுகிறது.