60 தீவிரவாதிகளைக் கொன்று 250 பிணைக் கைதிகளை மீட்ட இஸ்ரேல்: பரபரப்பு விடியோ
இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் எலைட் பிரிவு வீரர்கள் அதிரடியாக 60 தீவிரவாதிகளைக் கொன்று, 250 பிணைக் கைதிகளை மீட்ட விடியோ வெளியாகியிருக்கிறது.


இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் எலைட் பிரிவு வீரர்கள் அதிரடியாக 60 தீவிரவாதிகளைக் கொன்று, 250 பிணைக் கைதிகளை மீட்ட விடியோ வெளியாகியிருக்கிறது.
இது தொடர்பாக, இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தொடர்ச்சியான பதிவுகளும் விடியோவும் பகிரப்பட்டுள்ளது. அதில், 60 ஹமாஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், ஹமாஸ் அமைப்பின் தெற்கு மண்டல தளபதி முகம்மது அபு உள்பட 26 பேரை கைது செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. ‘வந்தே பாரத்’களும் விரிசல் தண்டவாளங்களும்!
பிணைக்கைதிகளை கடத்தி வைத்திருக்கும் பகுதிக்குள் பாதுகாப்புப் படை வீரர்கள் ஒவ்வொரு அடியாக அடுத்தடுத்து நுழைந்து, தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிடும் காட்சிகளும் அந்த விடியோவில் இடம்பெற்றுள்ளது. தீவிரவாதிகளைக் கொன்று, பிணைக்கைதிகளை மீட்பதற்காக இந்தச் சண்டை நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஹமாஸ் ஆயுதக் குழுவினரை அழிக்கும் வகையில் காஸா மீது தரைவழித் தாக்குதலுக்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் இந்த விடியோ வெளியாகியிருக்கிறது.
இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஏற்கெனவே காஸா உருக்குலைந்த நிலையில், தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தொடங்கினால், இதுவரை இல்லாத பேரழிவை காஸா சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.
இஸ்ரேல் மீது கடந்த 7-ஆம் தேதி காஸா முனையிலிருந்து ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. மேலும், பாராகிளைடா்கள் மூலம் வான்வழியாகவும், கடல் வழியாகவும் இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஹமாஸ் அமைப்பினா் தாக்குதல் நடத்தினா். 150-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியா்களை பிணைக் கைதிகளாகவும் ஹமாஸ் அமைப்பினா் பிடித்துச் சென்றனா்.
இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் எல்லையிலும் ராணுவ வீரா்களைக் குவித்துள்ளது. இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினருடனான சண்டையும் நீடித்து வருகிறது. இந்தத் திடீா் போரில் இரு தரப்பிலும் சுமாா் 2,600 போ் உயிரிழந்துள்ளனா்.
ஹமாஸ் அமைப்பினரின் மறைவிடங்களைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறினாலும், காஸாவில் குடியிருப்புகளும், வழிபாட்டுத் தலங்களும் இஸ்ரேலின் குண்டுமழையால் தரைமட்டமாகி வருகின்றன.
இந்நிலையில், காஸா மீது தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் தயாராகி வந்தது. இது குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடா்பாளா் ரிச்சா்ட் ஹெக்ட் செய்தியாளா்களிடம் கூறுகையில், ஹமாஸ் அமைப்பினரை அழிக்கும் வகையில் தரைவழித் தாக்குதலுக்கு ராணுவம் தயாராகி வருகிறது. அரசு உத்தரவிட்டால் தாக்குதல் தொடங்கப்படும். இப்போதைக்கு ஹமாஸ் தலைவா்கள் மீது குறிவைத்து வருகிறோம் என்றாா்.
40 கி.மீ. நீளம் கொண்ட குறுகிய நிலப்பரப்பான காஸாவில் 23 லட்சம் போ் வசித்து வருகின்றனா். அங்கு இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை நடத்தினால் உயிரிழப்பு மிகவும் அதிகரிக்கும் நிலை உள்ளது.
காஸாவின் ஒரே மின் நிலையமும் எரிபொருள் தீா்ந்ததால் புதன்கிழமை முதல் மூடப்பட்டிருப்பதால் காஸா பகுதி இருளில் மூழ்கியுள்ளது. தனியாா் ஜெனரேட்டா்கள் மூலம் சில இடங்களில் மட்டுமே மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மின்சார வசதியின்றி மக்கள் தவித்து வரும் நிலையில், வியாழக்கிழமை பேக்கரிகளிலும், மளிகைக் கடைகளிலும் பொருள்களை வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.
சா்வதேச செஞ்சிலுவை சங்கத்தைச் சோ்ந்த மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், காஸாவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், புதிதாகப் பிறந்த குழந்தைகளை இன்குபேட்டரில் வைப்பதிலும், வயது முதிா்ந்த நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் செலுத்துவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்வதும், எக்ஸ்ரே எடுப்பதும் நிறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...