உருகுவே நாட்டைச் சேர்ந்த முன்னாள் உலக அழகி ஷெரிகா டி அர்மாஸ் 26 வயதில் உயிரிழந்தார். கடந்த 2 ஆண்டுகளாக கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி உயிரிழந்தார்.
உருகுவே நாட்டைச் சேர்ந்தவர் ஷெரிகா டி அர்மாஸ். சிறு வயது முதலே மாடல் அழகியாக வேண்டும் என்பது இவரின் கனவு. அதனை நனவாக்கும் முயற்சியில் சிறு வயதிலிருந்தே அழகிப்போட்டிகளில் பங்கேற்றார்.
2015ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலக அழகிப்போட்டியில், முதல் 30 இடங்களைக் கூட ஷெரிகா பெறவில்லை. எனினும், அப்போட்டியில் பங்கேற்கும்போது அவருக்கு 18 வயதுதான்.
ஷெ டி ஆர்மாஸ் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் தலைமுடி, தோல் பராமரிப்பு தொடர்பான பொருள்களை உற்பத்தி செய்து விற்பனையிலும் அவர் ஈடுபட்டிருந்தார். மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவும், சிகிச்சை அளிப்பதற்காகவும் பெரீஸ் கிரிமினி என்ற தொண்டு நிறுவனத்தையும் நடத்தியவர்.
கடந்த 2 ஆண்டுகளாக கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில நாள்களாகவே கீமோதெரபி, ரேடியோ தெரபி முறை சிகிச்சைகளை எடுத்துக்கொண்டிருந்தார். அவரின் மறைவுக்கு உலக அழகிப்போட்டியில் பங்கேற்ற பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஊடகங்களுக்கு அவர் அளித்த நேர்காணல்களும் தற்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது.