தென் கொரியா மற்றும் அமெரிக்க படைகள் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. ஒருவேளை, வடகொரியாவால் ஹமாஸ் பாணியில் தாக்குதல் தொடரப்பட்டால் அதனை எதிர்கொள்வதற்காக தான் இந்தப் பயிற்சி என தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
தென்கொரியா மற்றும் அமெரிக்க நாடுகளின் படைகள், தொடர்ச்சியாக கூட்டு போர்ப் பயிற்சிகளில் ஈடுபடுவது வழக்கம்.
அக்.7 தாக்குதலுக்கு பிறகு நடைபெறும் இந்தப் பயிற்சியில், வடகொரியா ஹமாஸ் பாணியில் திடீரென பீரங்கி தாக்குதல் தொடுத்தால் ஆரம்பத்திலேயே அதன் தளத்தை தகர்க்க தயாராகும் வகையில் மூன்று நாள்கள் பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.
இதில் 5400 தென்கொரிய மற்றும் அமெரிக்க வீரர்கள் ஈடுபட்டனர். 300 பீரங்கிகளும் 1000-க்கும் மேற்பட்ட வாகனங்கள், போர் விமானங்கள் பயிற்சியில் பயன்படுத்தப்பட்டன.
இதையும் படிக்க: காஸா இறப்பு எண்ணிக்கையில் நம்பிக்கையில்லை: ஜோ பைடன்
வட கொரியா, அணுஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவது தென்கொரியாவுக்கு ஆபத்தாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் 100-க்கும் அதிகமான ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை வடகொரியா தாக்கத் தொடங்கினால் அது தென்கொரியாவுக்கு பேராபத்தாக மாறும் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அதன் எல்லையில் இருந்து 50-60 கிமீ தூரத்தில் சீயோல் அமைந்துள்ளது.
வட கொரியா இதற்கு எந்தவித பதிலும் இதுவரை கொடுக்கவில்லை. அமெரிக்கா - தென்கொரியா நாடுகள் கூட்டு படையெடுத்தலுக்கான முன்னோட்டமாக இதனை வடகொரியா அணுகலாம் எனவும் அதற்கு பதிலாக ஏவுகணை சோதனை நடத்தப்படலாம் எனவும் கருதப்படுகிறது.