தற்செயலாக நடந்த விபத்தினால், கடந்த 371 நாள்களாக விண்வெளியில் தங்கியிருந்த விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ இறுதியாக பூமிக்குத் திரும்பினார்.
அவரது விண்கலம் சேதமடைந்ததால், துரதிருஷ்டவசமாக விண்வெளியில் தங்கவேண்டிய நிலைக்கு ஆளான ரூபியோ, அதிகநாள்கள் விண்வெளியில் தங்கியிருந்த அமெரிக்கர் என்ற சாதனையையும் படைத்துவிட்டார்.
தொடர்ச்சியாக ஓராண்டுக்கும் அதிகமான நாள்கள் விண்வெளியில் தங்கியிருந்த முதல் அமெரிக்க விண்வெளி வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவர் தொடர்ச்சியாக 371 நாள்கள் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்தார். இதற்கு முன்பு, விண்வெளி வீரர் மார்க் வண்டே ஹேய் 355 நாள்கள் தொடர்ச்சியாக விண்வெளியில் தங்கியிருந்ததே சாதனையாக இருந்தது.
இந்த விண்வெளி வீரர், விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருக்க திட்டமிட்டக் காலத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.
மற்ற விண்வெளி வீரர்களுடன் ரூபியோ செப்டம்பர் 27ஆம் தேதி கஜகஸ்தான் அருகே பூமியில் இறங்கினர். அவர்கள், விண்கலத்திலிருந்து வெளியே தூக்கிவரப்பட்டனர். பல நாள்களாக பூமிஈர்ப்பு சக்தி இல்லாத இடத்தில் அவர்கள் இருந்ததால், அவர்களால் உடனடியாக நடக்க முடியாது என்பதால், அவர்கள் வெளியே தூக்கிவரப்பட்டனர்.
இவர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி விண்வெளிக்குச் சென்ற போது, இவர்கள் சென்ற விண்கலத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, இவர்கள் பூமிக்குத் திரும்ப முடியாமல் போனது. பிறகு அந்த விண்கலம் மட்டும் பூமிக்கு அனுப்பப்பட்டு, மற்றொரு விண்கலம் கடந்த பிப்ரவரி மாதம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. தற்செயலாக நடந்த இந்த நிகழ்வின் மூலம் ஒரு சாதனையைப் படைக்க நினைத்த ரூபியோ, அங்கேயே தங்கிவிட்டார். தற்போது பூமிக்குத் திரும்பியுள்ளார்.