இஸ்ரேல்- ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் காஸாவில் சிக்கியுள்ள பாலஸ்தீன மக்கள், மிகக் குறைவான வாழ்வாதாரப் பொருள்களோடு, மேலும் குறுகிய இடங்களுக்கு இடம்பெயரக் கட்டாயப்படுத்தப்படுவதால் விரக்தியில் உள்ளனர்.
இரண்டு மாத காலமாகத் தொடர்ந்து வரும் போரில் அதிகம் பாதிப்படுவது பொதுமக்கள்தான். இஸ்ரேல் தனது தாக்குதலை விரிவாக்கிக் கொண்டே செல்வதால் காஸாவில் பாதுகாப்பான இடம் என்பதேயில்லை என ஐ.நா தெரிவித்துள்ளது. ஏற்கெனவே 80 சதவீத காஸா மக்கள் தங்களின் வீடுகளிலிருந்து இடம்பெயரச் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழலின் அபாயத்தை உணர்த்த ஐ.நா பொது செயலர் அபூர்வமாக பயன்படுத்தும் சட்டப்பிரிவான 99-ஐ கையில் எடுத்துள்ளார். அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் பாதுகாப்பு அவையில் போர் நிறுத்தத்துக்கான தீர்மானம் நிறைவேற்ற அழைப்பு விடுத்துள்ளன.
ஐ.நாவின் எந்த முயற்சியையும் தனது அதிகாரத்தால் தடுக்கும் இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்காவே, பொதுமக்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகி வருவதைக் குறித்து கவலை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் இடப்பெயர்வையும் இறப்பையும் இஸ்ரேல் வரையறைக்குள் கொண்டுவர வேண்டும் என அமெரிக்கா, தெற்கு நோக்கிய தாக்குதலுக்கு முன்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: காஸா விவகாரம்: அபூா்வ சட்டப் பிரிவைக் கையிலெடுத்த குட்டெரெஸ்
பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், காஸாவில் சிக்கிக்கொண்டிருக்கும் மக்களின் வாழ்வாதாரப் பொருள்களுக்கு கடும் தட்டுபாடு நிலவி வருகிறது.