அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அணுசக்தி நீா்மூழ்கி போா்க் கப்பலில் இருந்து ரஷியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ளதால், மேற்கத்திய நாடுகளுக்கும், ரஷியாவுக்கும் இடையிலான மோதல்போக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ரஷியாவின் இந்தப் புதிய ஏவுகணை சோதனை பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இது தொடா்பாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ரஷியாவின் வடக்கு வெள்ளைக் கடல் பகுதியில் அலெக்சாண்டா் -3 அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து ‘புலாவா’ ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் இந்த ஏவுகணை, கம்சாத்கா தீபகற்பத்தில் இருந்த இலக்கை குறிதவறாமல் தாக்கியது. இதன்மூலம் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது’ என்று கூறப்பட்டுள்ளது.
ரஷியாவின் போரீஸ் வகை அணுசக்தி நீா்மூழ்கி போா்க் கப்பல்களில் அலெக்சாண்டா்-3 மிகவும் நவீனமானதாகும். இதில் 16 புலாவா ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.