காஸாவில் நிவாரண பணியாளர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் இஸ்ரேல் ராணுவம் தனது ராணுவ அதிகாரிகளின் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
காஸாவில் நிவாரண உணவுப் பொருள்கள் கொண்டுவந்த ‘வொர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்’ அறக்கட்டளையின் பணியாளர்கள் ஏழு பேர் சென்ற வாகனம், இஸ்ரேல் போர் விமானத்தால் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த நிகழ்வு உலக நாடுகள் மத்தியில் இஸ்ரேல் மீது அதிருப்தி அலையை ஏற்பட காரணமானது.
இந்த நிலையில், இஸ்ரேல் ராணுவம் 2 ராணுவ அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கியும் 3 பேரை கண்டித்து அவர்களின் பொறுப்பிலிருந்து விடுவித்தும் உத்தரவிட்டுள்ளது. முக்கியமான தகவலை தவறாக கையாண்டதற்காகவும் ராணுவத்தின் விதிகளை மீறியதற்காகவும் இந்த தண்டனை அளிக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம், இஸ்ரேல்- வடக்கு காஸா பிராந்திய எல்லையான இரெஸ் வாயிலை நிவாரண பொருள்கள் கொண்டு செல்வதற்காக திறப்பதாகவும் அறிவித்துள்ளது. மேலதிக விவரங்களை குறிப்பிடவில்லை.
முன்னதாக, காஸாவில் பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாக்கப்படுவதில் இஸ்ரேல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பொறுத்து எதிர்காலத்தில் அமெரிக்காவின் இஸ்ரேல் ஆதரவு தொடரும் என அமெரிக்க அதிபர் பைடன் பேசியதையடுத்து இஸ்ரேலின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முரண்பாடுகள் இருந்தபோதும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு வேண்டிய ராஜ்ய மற்றும் ராணுவ உதவிகளை தொடர்ச்சியாக செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
காஸாவில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 75 ஆயிரத்துக்கு அதிகமானோர் காயமுற்றதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.