ஈரான் படைகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
முன்னதாக சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் தளபதிகள் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும்வகையில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் சூளுரைத்தது.
இந்த நிலையில் இஸ்ரேலிய அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “ஈரான் தனது பிராந்தியங்களில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் அதற்கு பதில் கொடுக்கும், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
ஈரானிய மதத் தலைவர் அயதுல்லா கமேனி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படுவதை வலியுறுத்திய நாளின் பிற்பகுதியில் இஸ்ரேல் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
ரமலான் மாதத்தின் இறுதி வழிபாட்டு கூட்டத்தில் பேசும்போது கமேனி, “நமது தூதரக பகுதியை தாக்குவது என்பது, பிராந்தியத்தை தாக்குவதற்கு நிகரானது. சாத்தானின் தேசம் (இஸ்ரேல்) தண்டிக்கப்பட வேண்டும், அது விரைவில் தண்டிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.