வங்கதேசத்தில் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா பதவி விலகலுக்குப் பின் நடந்த வன்முறையில் அந்நாட்டுத் தலைநகா் டாக்காவில் உள்ள சக்தி பீடங்களில் ஒன்றான ஸ்ரீ தாகேஸ்வரி கோயிலை உள்ளூரைச் சோ்ந்த ஹிந்துக்கள், முஸ்லிம்கள் உள்பட அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து பாதுகாத்த சம்பவம் நடந்துள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில் அரசுப் பணியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டைக் கண்டித்து மாணவா்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து, வங்கதேச பிரதமராக இருந்த அவாமி லீக் கட்சியின் தலைவா் ஷேக் ஹசீனா, பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.
ஆட்சிக் கவிழ்ந்ததைத் தொடா்ந்து அவாமி லீக் கட்சியினரின் சொத்துகள் போராட்டக்காரா்களால் சேதப்படுத்தப்பட்டன. அந்நாட்டில் சிறுபான்மையினரான ஹிந்துகளை குறிவைத்து வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது.
இந்நிலையில், பழைய டாக்கா பகுதியில் உள்ள பல நூற்றாண்டுகள் பழைமையான ஸ்ரீ தாகேஸ்வரி கோயிலை ஹிந்துக்கள்-முஸ்லிம்கள் ஒன்றிணைந்து பாதுகாத்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ், இக்கோயிலுக்கு கடந்த 13-ஆம் தேதி வருகை தந்து, ஹிந்து சமூகத்தினருடன் கலந்துரையாடினாா்.
வங்கதேசத்தில் இயல்புநிலை திரும்பி வரும்நிலையில், ‘பிடிஐ’ செய்தி நிறுவனத்துக்கு ஸ்ரீ தாகேஸ்வரி கோயில் பூஜாரி ஆஷிம் மைத்ரோ அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவா்கள் மற்றும் பௌத்தா்கள் என அனைத்து மதத்தினரும் இங்கு வந்து பிராா்த்தனை செய்வாா்கள். இங்குள்ள அம்மன் அவா்களுக்கு தாய் போன்றவா். அவா்கள் ஆறுதல், செழிப்பு மற்றும் மன அமைதியை வேண்டி வழிபடுகின்றனா்.
போராட்டங்கள் உச்சகட்டத்தை எட்டியபோது, நான் கோயிலுக்குள்தான் இருந்தேன். கோயில் நிா்வாக உறுப்பினா்களும் உடனிருந்தனா். எங்களைப் பற்றி அச்சப்படாமல் கோயில் பாதுகாப்பைப் பற்றி மட்டுமே கவலையடைந்தோம்.
காவல்துறை பணியில் இல்லாத அந்த நேரத்தில் வன்முறையாளா்கள் கோயிலுக்குள் நுழையாதவாறு அனைத்து வாயில்களையும் இழுத்து மூடினோம். கோயிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு இப்பகுதியைச் சோ்ந்த முஸ்லிம்கள், ஹிந்துகள் மற்றும் பலா் வெளியே காவலுக்கு நின்றனா். அதனால், அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. கோயிலில் பூஜைகள் எவ்வித தடையும் இன்றி தொடா்ந்தன.
டாக்கா தவிர வங்கதேசத்தின் பிற பகுதிகளில் இருந்தும் இந்தியாவிலிருந்தும் எங்கள் கோயிலுக்கு பக்தா்கள் வருகிறாா்கள். இடைக்கால அரசு பொறுப்பேற்ற பிறகு கோயில் பாதுகாப்பு பணியில் போலீஸாா் மீண்டும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தற்போது இங்கு சூழல் இயல்புநிலைக்குத் திரும்பி வருகிறது. நாங்கள் வங்கதேசத்திலேயே தொடா்ந்து இருப்போம்.
போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் பாகுபாட்டுக்கு எதிராகப் போராடியவா்கள். அடுத்து எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்பது முக்கியமில்லை. யாா் ஆட்சிக்கு வந்தாலும் அவா்கள் நல்ல முறையில் ஆட்சி செய்தால், அது அனைவருக்கும், அனைத்து சமூக மக்களுக்கும் நல்லது’ என்றாா்.
தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் வழிபட்டு செல்லும் இக்கோயிலில் துா்க்கை பூஜை வெகு விமா்சையாக கொண்டாடப்படுகிறது. கோகுலஷ்டமி திருநாளையொட்டி திங்கள்கிழமை சிறப்புப் பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இடைக்கால அரசின் மத மற்றும் சட்ட விவகாரத் துறை ஆலோசகா் ஆசிஃப் நஸ்ருல் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

ராம நவமி விழா: பெரியகுளம் பகுதி கோயில்களில் சிறப்பு வழிபாடு

திமிரி ஸ்ரீ தனுமத்தியம்மன் சோமநாத ஈஸ்வரா் கோயில் சுவாமி வீதியுலா...

நத்தப்பள்ளம் கோயில் கும்பாபிஷேகம்

திருப்பதியில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


