

ஆப்கானிஸ்தானின் பர்மல் மாவட்டத்தைக் குறிவைத்து, டிச.24 இரவு பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில், பெண்கள் குழந்தைகள் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் மீட்புப் பணிகள் நடந்து வருவதாகவும், இதில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லாமன் கிராமம் உள்பட ஏழு கிராமங்கள் மீது இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் ஜெட் விமானங்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும் முர்க் பஜார் கிராமம் கடும் சேதமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு தலிபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
ஏற்கனவே, பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே இருந்த சிக்கல் இந்த தாக்குதல் மூலம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஒரு சில மாதங்களாக பாகிஸ்தானில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமே, ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகளுக்கு அந்நாட்டு அரசு கொடுத்துவரும் ஆதரவுதான் என்று பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், இந்த தாககுதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆனால், இந்த தாக்குதலில், பொதுமக்கள்தான் குறிவைக்கப்பட்டுள்ளனர் என்றும், பயங்கரவாதிகள் அல்ல என்றும் ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.