வாஷிங்டன் : இந்தியாவுக்கு 31 எம்க்யூ-9பி ஆயுதம் தாங்கிய ட்ரோன்களை (ஆளில்லா விமானங்கள்) விற்பனை செய்ய அமெரிக்கா கடந்த வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
அதிக உயரத்தில் நீடித்து உழைக்கும் இந்த ட்ரோன்கள், வானில் 35 மணி நேரத்துக்கும் மேலாக பறக்கக் கூடியவை. அந்த ட்ரோன்களால் 4 ஹெல்ஃபையா் வகை ஏவுகணைகள், சுமாா் 450 கிலோ வெடிகுண்டுகளை சுமந்து செல்ல முடியும். நீா்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிராக போா் புரிதல், கடல் பரப்பில் கண்காணிப்பு உள்பட பல்வேறு பணிகளை எம்க்யூ-9பி ஆயுதம் தாங்கிய ட்ரோன்கள் மேற்கொள்ளும்.
இந்நிலையில், அந்த ட்ரோன்களின் மதிப்பு 3.99 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.33,000 கோடி) என்று அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஜூன் 2023இல் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது. அமெரிக்காவிடமிருந்து இந்த நவீன ட்ரோன்களை கொள்முதல் செய்வதற்கான அறிவிப்பு வெளியானது.
இந்த ட்ரோன்கள் மூலம், இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புத் திறன் மேம்படுத்தப்படும் என்றும், இந்தியாவின் அரசியல் நிலைத்தன்மைக்கு முக்கியப் பங்காற்றும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.