கால வரையறையின்றி மின்வெட்டு, சாலைகள் முடக்கம்: பாக். மக்கள் போராட்டம்
பிரதான சாலைகள் அறிவிப்பில்லாமல் மூடப்படுதல், நேர வரையறையின்றி மின்சாரம் தடை செய்யப்படுதல் ஆகியவற்றை எதிர்த்து பலுசிஸ்தான் கரன் மற்றும் பாஸ்னி பகுதிகளில் மக்கள் பெரும்திரளாக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜோஷ்ன் பகுதியைச் சேர்ந்த மக்களும், மாணவர்களும் உதவி ஆணையருக்கு, தேர்தல் நேரத்தில் மூடப்பட்ட சாலைகளைத் திறக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களாக மூடப்பட்டிருந்த சாலைகள் இன்னமும் அப்படியே தொடர்வதால் மக்கள் இடையூறுகளை எதிர்கொள்வதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பலுசிஸ்தான் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில் மக்கள் 12 முதல் 18 மணி நேரம் மின்வெட்டை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.
பலுசிஸ்தான் மட்டுமில்லாமல் கில்கித் பால்டிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் மின்வெட்டு நேர வரையின்றி மேற்கொள்ளப்படுவதாகவும் நாளுக்கு நாள் இந்த பிரச்னை அதிகரித்து வருவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.