தென்கொரியாவை தலைமையகமாகக் கொண்ட நிறுவனமான எல்ஜி, வரும் சிஇஎஸ் 2024 தொழில்நுட்ப மாநாட்டில் தனது புதிய செய்யறிவு ரோபோவை அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த புதிய ரோபோட் பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, வீட்டில் உள்ள சின்னச் சின்ன வேலைகளை செய்யும் திறன்கொண்டுள்ளது. வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டிற்குள் உலாவி விளக்குகளை, மின் விசிறிகளை அணைத்தல், செல்லப் பிராணிகளைப் பார்த்துக்கொள்ளுதல் போன்றவற்றை செய்யும் திறன்கொண்டது.
மேலும், வீட்டின் நேரடி காணொலிகளை பார்க்க உதவுதல், வீட்டில் ஏதேனும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் உரிமையாளர்களைத் தொடர்புகொள்ளுதல் போன்றவற்றை சிறப்பாகச் செய்யும் என எல்ஜி தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் அறிமுகமாகவுள்ள இந்த ரோபோ, மனிதர்களின் மனநிலையை அவர்களின் நடவடிக்கைகள் மூலம் புரிந்து நடக்கக்கூடியது. மேலும், இதற்கு புதிய விஷயங்களையும் கற்றுக்கொடுக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
மனிதர்களைப் போலவே உரையாடும் திறன்கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவின் விலை பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.