அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் வெளிப்புற கதவின் மீது வாகனம் மோதியதால் திங்கள்கிழமை மாலை பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இல்லை. வெள்ளை மாளிகை கதவின் மீது மோதிய வாகனத்தின் ஓட்டுநரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையை பாதுகாக்கும் அமெரிக்க ரகசிய சேவையின் செய்தித் தொடர்பாளர் ஆண்டனி குக்லீல்மி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
“உள்ளூர் நேரப்படி மாலை 6 அணியளவில் வெள்ளை மாளிகையில் வெளிப்புற கதவின் மீது ஒரு வாகனம் மோதியது. அந்த வாகனத்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோதலுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இது விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட சதியா என்பது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
உச்சகட்ட கண்காணிப்பின் கீழ் இருக்கும் வெள்ளை மாளிகையில் இதுபோன்ற சம்பவம் அரங்கேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.