நேட்டோ அமைப்பு. மிகப்பெரிய போர்ப் பயிற்சியை அடுத்த வாரம் தொடங்கவுள்ளது. 90 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் பங்கெடுக்கும் இந்தப் பயிற்சி சில மாதங்களுக்கு நீடிக்கும் எனத் தெரிகிறது.
ரஷ்யாவின் எல்லையில் உள்ள உறுப்பு நாடுகளைக் காக்கும் தங்கள் திறனை நேட்டோ காண்பிக்க உள்ளது.
உக்ரைனில் ரஷ்யாவின் போர் வீழ்ச்சியடைந்துவருகிற நிலையில், நேட்டோ அமைப்பு இந்தப் பயிற்சியைத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நேட்டோ, நேரடியாக போரில் பங்கேற்கவில்லை எனினும் உக்ரைனுக்கு வேண்டிய ஆயுதமல்லாத உதவிகளைச் செய்து வந்தது. எனினும், அதன் உறுப்பு நாடுகள் போர் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை அனுப்பின.
ரஷ்யா போரைத் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு பிப்.2022-ல் நேட்டோ ரஷ்யா- உக்ரைன் நாடுகளையொட்டிய கிழக்கு பக்கவாட்டு எல்லையில் பாதுகாப்பை அதிகரித்தது.
‘உறுதியான பாதுகாவல் 24’ எனப் பெயரிடப்பட்ட இந்தப் போர்ப் பயிற்சிகள் வடக்கு முதல் மத்திய ஐரோப்பா மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பல்லாயிரம் கிமீ தூரத்தை பல மாதங்களுக்கு தாக்குபிடிக்கும் அளவில் எல்லாவிதமான பன்முனை சிக்கலான தாக்குதலையும் எதிர்கொள்ளும் தங்கள் திறனைக் காண்பிக்கும் என 31 நாடுகளை உள்ளடக்கிய நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது.
ரஷியா மற்றும் பயங்கரவாத அமைப்புகளைத் தங்களின் எதிரிகளாக நேட்டோ அறிவித்துள்ளது.
ஐரோப்பிய-அட்லாண்டிக் பகுதிகளை வலுப்படுத்த வடக்கு அமெரிக்காவில் இருக்கும் படைகள் மூலமாக கடல் கடந்தும் கூட்டணி உறுதிப்படுத்தப்படும் என நேட்டோ அமைப்பின் அமெரிக்க தளபதி கிறிஸ்டோபர் கவோலி தெரிவித்துள்ளார்.
ஒற்றுமை, பலம் மற்றும் ஒருவரை ஒருவர் காத்து கொள்வதை இந்தப் போர்ப்பயிற்சி காண்பிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேட்டோவில் புதிதாக இணைந்த ஸ்வீடன் நாடும் இந்தப் போர் பயிற்சியில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: அமெரிக்க நண்பர்களிடம் தெரிவிப்பது... : நெதன்யாகு
பிரிட்டன் தனது 20 ஆயிரம் வீரர்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப போர் விமானங்கள், கண்காணிப்பு விமானங்கள், போர் கப்பல்கள் ஆகியவற்றை அனுப்புவதாகத் தெரிவித்துள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் பல்வேறு படைகள் பிப்ரவரி முதல் ஜூன் வரை பணியமர்த்தப்படவுள்ளன.