
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் இந்தியாவையும் இணைத்திருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி ஆய்வு நிறுவனமான ’செரா’ திங்கள்கிழமை(ஜூலை 1) அறிவித்துள்ளது.
ப்ளூ ஒரிஜின் நிறுவனத்துடன் இணைந்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில், உலகளவில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த குடிமக்கள் விண்வெளிக்கு குறுகிய காலம் பயணம் மேற்கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், இந்தியர்களும் இனி விண்வெளி சுற்றுலா பயணம் மேற்கொள்ளலாம். மொத்தம் 6 பேர் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ப்ளூ ஒரிஜின் நிறுவனத்தின் ‘நியூ ஷெப்பர்டு’ விண்கலத்தில் இந்தியாவை சேர்ந்த ஒருவருக்கும் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செரா நிறுவனர்களான சாம் ஹட்சின்சன் மற்றும் ஜோஷுவா ஸ்கர்லா ஆகியோர் கூறியிருப்பதாவது, இந்தியாவின் விண்வெளி ஆய்வு குறித்த உள்கட்டமைப்புகளையும் செயல்பாடுகளையும் மிகவும் விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
”ஒவ்வொருவரும் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்வதை சாத்தியமாக்கும் முன்னெடுப்பில் இறங்கியுள்ளோம். அந்த வகையில், இந்த பொன்னான வாய்ப்பை, விண்வெளி பயணத்தை அனுபவிக்க விரும்பும் இந்திய குடிமக்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார் செரா இணை நிறுவனர் ஜோஷுவா ஸ்கர்லா.
இந்த் திட்டத்தின்கீழ், பூமியிலிருந்து 100 கி.மீ. தூரத்தில் சர்வதேச நாடுகளால் வரையறுக்கப்பட்டுள்ள விண்வெளி எல்லைக் கோடான ’கர்மான் லைன்’ பகுதியில் சுமார் 11 நிமிடங்கள் பயணிக்கலாம்.
இதற்காக வெறும் ரூ. 209(2.50 டாலர்) மட்டுமே பதிவுக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பல்வேறு தெரிவு நடைமுறைகளுக்குப் பின்னரே, தகுதியான நபருக்கு இந்த வாய்ப்பளிக்கப்படும் என ப்ளூ ஒரிஜின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.