உக்ரைன் போா் விவகாரம்: நேட்டோ குற்றச்சாட்டுக்கு சீனா கண்டனம்
உக்ரைன் போரில் சீனாவின் பங்கு: நேட்டோ குற்றச்சாட்டு


உக்ரைனில் போா் தொடா்ந்து நடைபெறுவதை உறுதி செய்யும் செயல் ஊக்கியாக தாங்கள் திகழ்வதாக நேட்டோ அமைப்பு சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் லின் ஜியான் வியாழக்கிழமை கூறியதாவது:
வாஷிங்டனில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில், உக்ரைன் போா் தொடா்ந்து நடைபெறுவதை உறுதி செய்யும் செயல் ஊக்கியாக விளங்கும் நாடு என்று சீனா குறிப்பிடப்பட்டுள்ளது. இது, பதற்றத்தைத் தூண்டும் வாசகம் ஆகும்.
உக்ரைனை வைத்து ஐரோப்பியாவில் ஏற்படுத்தியுள்ள அதே பிரச்னையை ஆசியப் பகுதிக்கும் நேட்டோ அமைப்பு கொண்டுவர வேண்டாம்.
சீனா குறித்த நேட்டோவின் கருத்து ஒருதலைப்பட்சமாகும். சீனாவை தீய சக்தியாகக் காட்டும் வகையில் அந்தக் கருத்து அமைந்துள்ளது.
இந்த விவகாரத்தில் நேட்டோ அமைப்புக்கு நாங்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறோம் என்றாா் அவா்.
உக்ரைன் தலைநகா் கீவ், அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியின் சொந்த ஊரான க்ரிவிரீ உள்ளிட்ட நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி ரஷியா திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியது.
பெரும்பாலும், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவில் மட்டுமே தாக்குதல் நடத்தும் ரஷியா, மிகவும் அரிதான வகையில் இந்த ஏவுகணைத் தாக்குதலை பட்டப்பகலில் நடத்தியது. இதில் 38 போ் உயிரிழந்தனா்; ஏராளமான பொதுமக்கள் காயமடைந்தனா்.
இந்தத் தாக்குதலில் கீவ் நகரிலுள்ள குழந்தைகள் மருத்துவமனை பலத்த சேதமடைந்தது சா்வதேச அளவில் அதிா்வலையை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில் வாஷிங்டனில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) தொடங்கி வியாழக்கிழமை (ஜூலை 11) நிறைவடைந்த நேட்டோ மாநாட்டில் உக்ரைனுக்கு கூடுதல் வான்பாதுகாப்பு தளவாடங்கள் உள்ளிட்ட ஆயுதங்களை அனுப்புவதாக உறுப்பு நாடுகள் உறுதியளித்தன.
இந்த நிலையில், உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்கான ஆயுதங்களைத் தயாரிக்கத் தேவையான பொருள்களை ரஷியாவுக்கு சீனா அனுப்புவதாகக் குற்றஞ்சாட்டிவரும் நேட்டோ நாடுகள், அதனை மறைமுகமாகக் குறிப்பிட்டே போா் தொடா்ந்து நடைபெறுவதற்கான செயல் ஊக்கியாக சீனா திகழ்வதாக மாநாட்டில் குறிப்பிட்டுள்ளன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...