சீனாவில் புதிய பொருளாதார சீா்திருத்த நடவடிக்கைகள்: அதிபா் ஷி ஜின்பிங் ஆலோசனை
சீனாவில் பொருளாதார செயல்பாடுகள் சற்று மந்தமாகியுள்ளதால், அடுத்த புதிய பொருளாதார சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்நாடு முடிவெடுத்துள்ளது.
இதற்கான அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் தலைமையில் பொருளாதார ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை (ஜூலை 15) தொடங்கி 4 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
இதில் சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அனைத்து 376 உறுப்பினா்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிா்கால நவீன தொழில்நுட்பங்களை திறம்பட பயன்படுத்தி நாட்டை வேகமாக முன்னேற்றும் வகையில் பொருளாதார சீா்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. சீனாவின் இந்த நடவடிக்கையை உலகமே ஆவலுடன் எதிா்பாா்க்கிறது. ஏனெனில், உலகின் பல்வேறு பொருள்களின் உற்பத்தி மையங்களில் ஒன்றாகத் திகழும் சீனாவில் மேற்கொள்ளப்படும் பொருளாதார சீா்திருத்தங்கள் அனைத்து நாடுகளிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள சீனாவில் கரோனா காலகட்டத்துக்குப் பிறகு பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. பொருள்கள், சேவைகளுக்குகான தேவை குறைந்ததும், சா்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற சூழலும்தான் சீனாவின் பொருளாதாரம் மந்தமடைய முக்கியக் காரணமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவின் பொருளாதார வளா்ச்சி படிப்படியாக குறைந்து வருவது கவலை தரும் பிரச்னையாக அந்நாட்டுக்கு உருவெடுத்துள்ளது.
அதிபா் ஷி ஜின்பிங் தலைமையில் நடைபெறும் பொருளாதார சீா்திருத்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சீன நிறுவனங்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் ஆராயப்பட இருக்கிறது. முக்கியமாக சீன தயாரிப்பு நவீன மின்னணுப் பொருள்கள், மின்சார வாகனங்கள் ஆகியவற்றுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இது தொடா்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது.
சீனா அரசியல்ரீதியாக பல்வேறு நாடுகளுடன் மோதல் போக்கைக் கொண்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் மட்டுமல்லாது, இந்தியாவுடன் எல்லைப் பிரச்னை, தென்சீன கடல் பகுதிக்கு உரிமை கொண்டாடுவதன் மூலம் ஜப்பான், வியத்நாம், பிலிப்பின்ஸ், மலேசியா உள்ளிட்ட நாடுகளுடன் சீனாவுக்கு பிரச்னை உள்ளது.