ஸ்விட்சர்லாந்தில் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள ’தற்கொலை இயந்திரம்’ மருத்துவர்களின் மேற்பார்வையின்றியே, மூச்சுத் திணறலோ, வலியோ இல்லாமல் தற்கொலை செய்துகொள்ள உதவுமென்று கூறப்படுகிறது.
சார்கோ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திரம் விண்கலத்தைப் போன்ற உருவம் கொண்டுள்ளது. இந்த இயந்திரத்தின் உள்ளே படுத்துக்கொண்டு, ஒரு பட்டனை அழுத்தினால், உள்ளிருக்கும் உயிர்வாழத் தேவைப்படும் ஆக்சிஜன் வாயுக்குப் பதிலாக, நைட்ரஜன் வாயு நிரம்பி, உடலில் ’ஹைபோக்சியா’ பாதிப்பு (உடல் செயல்பாட்டுக்குத் தேவையான ஆக்சிஜன் உடலிலுள்ள திசுக்களுக்கு கிடைக்காமல் போகும் நிலை ஹைபோக்சியா எனப்படுகிறது) ஏற்பட்டு எந்த வலியுமின்றி உயிர் பிரியும் என்று இதனை வடிவமைத்த ‘லாஸ்ட் ரெசார்ட் நிறுவனம்’ தெரிவித்துள்ளது.
இயந்திரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆக்சிஜன் அளவை அளக்கும் கருவி. - AFP
மேலும், ஸ்விட்சர்லாந்தில் இதற்கான சட்டப்பூர்வ அனுமதி இருப்பதாகவும், கடுமையான உடல் பாதிப்படைந்தவர்களை சட்டப்படி கருணைக் கொலை செய்ய அனுமதி வழங்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் இறப்பதற்கு 20 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1,600) கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
லாஸ்ட் ரெசார்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கூறுகையில், “இப்போதே இந்த இயந்திரத்தைப் பயன்படுத்த மக்கள் வரிசையில் நிற்கின்றனர். ஆக்சிஜன் இல்லாத காற்றை சுவாசித்து ஆழ்ந்த உறக்க நிலைக்குச் சென்று உயிரிழப்பதைவிட இறப்பதற்கு சிறந்த வழியை என்னால் கற்பனைகூட செய்ய முடியவில்லை” என்று கூறினார்.
AFP
அதே நேரத்தில் இறக்க விரும்பும் நபர் முதலில் அதற்கான மனதிடம் பற்றிய ஒரு மதிப்பீட்டில் தேர்ச்சி பெற வேண்டும் என அந்த நாட்டின் சட்டம் கூறுகிறது.
தற்கொலை இயந்திரத்தைப் பயன்படுத்த அதனுள்ளே படுத்து கதவை மூட வேண்டும். பின் அவர் யார், எங்கிருந்து வருகிறார், பட்டனை அழுத்தினால் என்ன ஆகப் போகிறது தெரியுமா என்பன போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.
பின்னர், ‘நீங்கள் இறக்க விரும்பினால் இந்த பட்டனை அழுத்தவும்’ என்ற கட்டளை வந்தவுடன் உள்ளிருக்கும் நபர் அதனை அழுத்த வேண்டும். பின் இரு முறை காற்றை சுவாசித்ததும் அவர்கள் உடலிலுள்ள ஆக்சிஜன் அளவு குறைந்து, மயக்க நிலைக்குச் சென்று சிறிது மகிழ்ச்சியாகவும் உணர்வார்கள். கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழந்து 5 நிமிடங்களுக்குள் அவர்கள் இறந்துவிடுவார்கள்’ என இந்த இயந்திரத்தை உருவாக்கிய பிலிப் நீட்ஷ்கே கூறினார்.
மேலும், “ஒருமுறை பட்டனை அழுத்தினால் 30 நொடிகளுக்குள் 21%-ல் இருந்து 0.05%-க்கு ஆக்சிஜன் அளவு குறைந்துவிடும். சார்கோவில் உள்ள கணினியில் உள்ளிருக்கும் நபரின் ஆக்சிஜன் அளவு, இதயத்துடிப்பு அளவு, ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவு ஆகியவை கண்காணிக்கப்படும்” என்றும் அவர் கூறினார்.
கடைசி நேரத்தில் தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டால் என்ன ஆகும் என்று கேட்டதற்கு, ”ஒருமுறை பட்டனை அழுத்தினால் அவ்வளவுதான், திரும்பி வரும் வாய்ப்பில்லை” என்று பிலிப் நீட்ஷ்கே தெரிவித்தார்.
AFP
முதல் பயனாளர் யார் என்பது குறித்தோ, எப்போது இறக்கப் போகிறார்கள் என்பது குறித்தோ எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
”அமைதியாக இறக்க விரும்புவோரின் விவரங்களை வெளியிட்டு அமைதியைக் கெடுக்க எங்களுக்கு விருப்பமில்லை. எனவே, இயற்கையான சூழலில் தனியார் இடத்தில் இது செயல்படுத்தப்படும். இந்த ஆண்டில் இது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இறக்க விரும்புபவர்களுக்கு குறைந்தது 50 வயது இருக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கடுமையான உடல் குறைபாடு கொண்டிருந்தால் வயது அடிப்படையில் மறுப்பு ஏதுமின்றி இறக்க அனுமதிக்கப்படுவார்கள்” என லாஸ்ட் ரெசார்ட் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் ஃபியனா ஸ்டூவர்ட் தெரிவித்தார்.
இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுவது குறித்து பல விவாதங்கள் எழுந்து வரும் வேளையில் , “சார்கோ இயந்திரம் பயன்படுத்த சட்டப்பூர்வமாக எந்தத் தடையும் இல்லை என்பது எங்கள் புரிதல். இதில் பயன்படுத்தப்படும் நைட்ரஜன் கொடிய ஆயுதம் இல்லை. அது காற்றில் 78% கலந்துள்ளது. நாங்கள் மருத்துவர்கள் உதவியின்றி கருணைக் கொலைகளை செய்ய முயற்சிக்கிறோம்.
ஒரு ஆண்டு காலமாக இந்த இயந்திரத்தில் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதில், மனிதர்களோ, விலங்குகளோ சோதனைக்குப் பயன்படுத்தப்படவில்லை” என்று ஸ்டூவர்ட் கூறினார்.
முப்பரிமாண முறையில் இந்த இயந்திரத்தை உருவாக்க 650000 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 6 கோடி) செலவானதாகவும், நெதர்லாந்தில் 12 ஆண்டுகளாக இதனை ஆராய்ச்சி செய்து உருவாக்கியதாகவும் அந்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள இயந்திரத்தை 5 அடி 8 அங்குலம் உயரமுள்ள நபர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், தம்பதிகளுக்கு ஏற்ற தற்கொலை இயந்திரங்களை அடுத்து வடிவமைக்க உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
மரண தண்டனைகளுக்கு இந்த இயந்திரம் ஒருபோதும் பயன்படுத்தப்படாது என்று லாஸ்ட் ரெசார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நம்பிக்கை ஏற்படுத்தும் செயல்பாடுகள்

வெப்பத் தாக்கம்: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு
தகிக்கும் கோடை; கவனம் தேவை!

தோ்தல் ஆணையம் மறுசீரமைக்கப்பட வேண்டும்! - க. கிருஷ்ணசாமி
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு




