இந்த பரபரப்பான உலகில், வேலை தேடுவது என்பது அவ்வளவு எளிதான வேலையல்ல, குவியும் வேலைக்கான விண்ணப்பங்களில் நமது தனித்துத் தெரிய வேண்டும் என்றால், எதையாவது செய்துதானே ஆக வேண்டும்.
ஒரு இளைஞர், அப்படி ஒரு யோசனையை வகுத்து மிகக் கச்சிதமாக செய்தும் முடித்திருக்கிறார். நியூ யார்க்கில், வேலைத் தேடிக்கொண்டிருந்த டேவிட் என்ற இளைஞர், தனியார் நிறுவனம் ஒன்றில், வேலைக்காக விண்ணப்பித்தபோது, அதனுடன் ஒரு சுவையான அன்பளிப்பையும் இணைத்திருந்தார்.
டேவிட், தனது சுயவிவரக் குறிப்புடன், கைப்பட ஒரு கடிதம் எழுதி, அதனுடன் சுவையான பீட்ஸாவையும் அலுவலகத்தில் கொடுத்து வந்தார். அந்த கடிதத்தில், உங்கள் அலுவலகத்தின் பொறியாளர் குழுவில் இணைய விருப்பத்தோடு இருக்கிறேன், எனது இணையதளம் சென்று எனது விவரத்தைப் பார்க்கும் குழுவுக்கு அன்பளிப்பாக இந்த பீட்சாவை இணைத்துள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த யோசனை சிலருக்குப் பிடித்திருக்கலாம், அல்லது பிடிக்காமலும் இருக்கலாம். ஆனால் நல்வாய்ப்பாக அந்த தனியார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கு டேவிட்டின் இந்த வழிமுறை மிகவும் பிடித்துவிட்டது. இதனை ஒரு கதையாக இணையதளத்திலும் பதிவிட்டுள்ளார். அதில், டேவிட்டின் இந்த வழக்கத்திற்கு மாறான புதிய முயற்சியை பாராட்டியிருக்கிறார். தனது சுயவிவரக் குறிப்புடன் தனது இணையதளத்தின் முகவரியை சேர்த்திருக்கிறார். அதனை பார்த்து, அவரைப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளும் வசதியையும் ஏற்படுத்தியிருக்கிறார்என்று பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகியிருக்கிறது. சமூக வலைத்தளப் பயனர்களுக்கும் இவரது ஐடியா மிகவும் பிடித்திருந்து லைக் போட்டிருக்கிறார்கள். பலரும் அவரை வேலைக்கு எடுத்துக்கொள்ளுங்கள் என்றும், இப்படித்தான் இளைஞர்கள் மாற்றி யோசிக்கவேண்டும் என்றும் பலவாறான கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
இது வேலை தேடும் பல இளைஞர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமையலாம். ஆனால், எல்லோரும் பீட்ஸாவையே அனுப்ப வேண்டாம், புதிதாக எதையாவது முயற்சிக்கலாம் என்றும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால், அவருக்கு வேலை கிடைத்ததா என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை.