ஒரு பிஸ்கட் பாக்கெட் ரூ. 1100! இஸ்ரேல் போரால் காஸாவில் கடும் பஞ்சம்!!

குழந்தைகளின் பசியை மறக்க வைத்து தூங்க வைக்கும் கொடூரம் நிகழ்வதாக வேதனை
ஒரு பிஸ்கட் பாக்கெட் ரூ. 1100! இஸ்ரேல் போரால் காஸாவில் கடும் பஞ்சம்!!
AP
Published on
Updated on
2 min read

இஸ்ரேலின் தாக்குதலால் காஸாவில் லட்சக் கணக்கானோர் வறுமையில் தவித்து வருவதாக காஸா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஸா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் காஸாவின் பல பகுதிகளில் பசியிலும், வறுமையிலும் மக்கள் வாடுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் பட்டினியை ஒரு போர்த் தந்திரமாக இஸ்ரேல் நாடு நடத்தி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், தெற்கு காஸாவில் லட்சக்கணக்கானோர் (பெரும்பாலும் ஈத்ஸ் இனத்தவர்) நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். ஏனெனில், தெற்கைவிட வடக்குப் பகுதியில் முழுவதுமாக பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தொண்டு நிறுவனங்களிடமிருந்து உணவைப் பெற நூற்றுக்கணக்கான மக்கள் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள். அவர்கள் ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே உணவு உண்கின்றனர். குழந்தைகள் பசியினால் தவிப்பதால், அவர்களின் பசியை மறக்க வைத்து, தூங்கவைக்கும் கொடூரம் ஏற்பட்டிருப்பதாக தஞ்சமடைந்தோர் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்தச் சூழலில், கடந்த வாரம் மத்திய காஸா பகுதிக்கு உணவுப் பொருள்களை ஏற்றிச் சென்ற சுமார் 100 லாரிகளை ஆயுதம் ஏந்திய கும்பல் சுற்றிவளைத்து, அதிலிருந்த பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றதாக ஐ.நா. தெரிவித்தது. காஸாவில் உள்ளூர் பேக்கரிகள் ஒரு வாரகாலமாக மூடப்பட்டுள்ளன.

நிவாரண உதவி கோரும் பொதுமக்கள்
நிவாரண உதவி கோரும் பொதுமக்கள்AP

சந்தையில் ஒரு ரொட்டி பாக்கெட்டின் விலை 13 டாலருக்குமேல் (இந்திய மதிப்பில் ரூ. 1100க்கும் மேல்), ஒரு காஃபி தூள் பாக்கெட் சுமார் 1.30 டாலர் (ரூ. 110) ஒரு கிலோகிராம் வெங்காயம் 10 டாலர் (ரூ. 845), சமையல் எண்ணெய் 15 டாலர் (ரூ. 1,267), இறைச்சிகள் சந்தையில் சில வாரங்களுக்கு முன்பாகவே முற்றிலும் காணாத பொருளாகி விட்டன; குறிப்பாக, சந்தையில் இவையெல்லாம் கிடைத்தால் மட்டுமே இந்த விலைப்பட்டியல்.

இதற்கிடையே, காஸாவுக்கு செப்டம்பர் மாதத்தில் 4,200 க்கும் அதிகமான லாரிகளில் நிவாரண உதவிப் பொருள்கள் வழங்கப்பட்ட நிலையில், அக்டோபர் மாதத்தில் 1,800 லாரிகளாக குறைந்தது.

நிவாரண உதவி கோரும் பொதுமக்கள்
நிவாரண உதவி கோரும் பொதுமக்கள்AP

2023 ஆம் ஆண்டு அக்டோபரில், ஹமாஸ் தலைமையிலான போராளிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து, சுமார் 1,200 பேரைக் கொன்றனர். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே போர் தொடங்கியது.

இஸ்ரேல் ராணுவம் சுமார் 13 மாதங்களாக நடத்திவரும் தாக்குதலால் காஸாவில் 44,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகளே.

இருப்பினும், பலியானவர்களில் எத்தனை பேர் போராளிகள் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், காஸாவில் போர்க் குற்றங்களைத் தூண்டியதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் கேல்ண்ட் இருவரையும் கைது செய்வதற்கான ஆணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com