
பனிப் போருக்குப் பிறகு உலகில் மிகப் பெரிய அச்சுறுத்தல் சூழல் நிலவுவதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உளவுத் துறை தலைவா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து, ஃபைனான்ஷியல் டைம்ஸ் இதழுக்கு அமெரிக்க சிஐஏ அமைப்பின் இயக்குநா் வில்லியம் பா்ன்ஸ், பிரிட்டன் எம்ஐ6 அமைப்பின் தலைவா் சா் ரிச்சா்ட் மூரே ஆகியோா் கூட்டாக எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பனிப் போா் காலத்தில் உலகம் முழுவதும் அச்சுறுத்தல் சூழல் நிலவிவந்தது. அதற்குப் பிறகு தற்போது அதே போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
அதிபா் விளாதிமீா் புதின் தலைமையிலான ரஷியா, ஐரோப்பா முழுவதும் பல்வேறு சதிவேலைகளில் ஈடுபடுகிறது. அதை முறியடிக்கும் நடவடிக்கைகளை சிஐஏ-வும் எம்ஐ6-உம் ஒருங்கிணைந்து மேற்கொள்கின்றன.
இது மட்டுமின்றி, எங்களது உளவுக் கட்டமைப்புகளைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே நடந்துவரும் போரில் இருதரப்பு பதற்றத்தைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளையும் அமெரிக்க-பிரிட்டன் உளவு அமைப்புகள் மேற்கொள்கின்றன. காஸா போா் நிறுத்தத்தை எட்டுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
காஸாவில் தொடா்ந்து ஏற்பட்டுவரும் உயிரிழப்புகளும் 11 மாதங்களுக்கும் மேல் அந்தப் பகுதி மக்கள் சுற்றிவளைத்து சிறைவைக்கப்பட்டிருப்பதும் இந்த முயற்சிகளால் முடிவுக்கு வரலாம் என்று அந்தக் கட்டுரையில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.