ரஷியா ராணுவத்துக்குச் சொந்தமான ஐலுஷின்-ஐஎல்-76 ரக ராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று பெல்கோரோட் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாக ரஷிய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
அந்த விமானத்தில் 65 உக்ரைன் போர்க் கைதிகளும், 6 ரஷிய விமானிகளும் 3 இதர பயணிகளும் இருந்துள்ளனர். அந்நாட்டு நேரப்படி இன்று முற்பகல் 11 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் உயிர் பிழைத்தவர்கள் பற்றிய எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
ஆனால், ரஷிய ராணுவ விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு மற்றும் விசாரணைக் குழு விரைந்துள்ளது.
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 65 பிணைக் கைதிகளுடன் சென்று கொண்டிருந்த விமானம் விழுந்து நொறுங்கியதாகவும், ஆனால், அதனை கீவ் பகுதியிலிருந்து சுட்டு வீழ்த்தியதாக ரஷிய கீழவையின் உறுப்பினர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர்கள் தங்கள் நாட்டு சொந்த வீரர்களையே சுட்டு வீழ்த்தியுள்ளனர் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளனர். இதில் எங்கள் நாட்டு விமானிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது கூற்றுக்கு எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை. ஆனால் உறுதிசெய்யப்பட்ட தகவல் என்று தெரிவித்துள்ளார்.