பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா முகமை தனது பணியாளர்களில் சிலரை பணிநீக்கம் செய்துள்ளது. இஸ்ரேலின் மீதான ஹமாஸின் தாக்குதலில் அவர்கள் பங்குவகித்ததாக எழுப்பப்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமை, காஸாவில் மனிதநேய உதவிகளை அளிப்பதில் முதன்மை வகிக்கிறது. 13 ஆயிரம் பேர் இந்த முகமையில் பணியாற்றுகிறார்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உதவி பணியாளர்கள் என பல்வேறு பணிநிலைகளில் பணியாற்றுபவர்களில் பெரும்பான்மையினர், பாலஸ்தீனர்கள்.
இந்தக் குற்றச்சாட்டை இஸ்ரேல் முன்வைத்தது. முன்னதாக ஐநாவின் பள்ளிகளில் இஸ்ரேலுக்கு எதிரான கருத்துகள் பயிற்றுவிக்கப்படுவதாகவும் அதன் பணியாளர்கள் ஹமாஸுடன் இணைந்து செயல்படுவதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டி வந்தது.
இந்த நிலையில், ஐ.நா சிலரைப் பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்தபோதும் மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.
தனது பணியாளர்கள் மீதான குற்றச்சாட்டு அதிர்ச்சியளிப்பதாகவும் பயங்கரவாத செயலில் ஈடுப்பட்டிருந்தால் அதற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் முகமையின் தலைவர் பிலிப் லாஸரினி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ஹூதிக்கள் தாக்குதல்: 42% சரிந்த சூயஸ் கால்வாய் போக்குவரத்து
இதனை தொடர்ந்து அமெரிக்கா இந்த முகமைக்கான நிதியை நிறுத்தியுள்ளது. மிகப்பெரிய நிதி உதவியாளரான அமெரிக்கா 2022-ல் ஒட்டுமொத்தமாக 34 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு நிதியுதவி செய்தது குறிப்பிடத்தக்கது.