காணாமல் போன மலேசிய விமானம்: 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தேடுதல் வேட்டை!

மலேசிய விமானத்தைத் தேடும் பணி 11 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடக்கம்.
காணாமல் போன மலேசிய விமானத்தின் ஓவியம்
காணாமல் போன மலேசிய விமானத்தின் ஓவியம்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

எம்ஹெச்370 மலேசிய விமானம் மர்மமான முறையில் மாயமாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் தேடுதல் வேட்டையை மலேசிய அரசு தொடங்கியுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு மா்மமான முறையில் மாயமான மலேசியன் ஏா்லைன்ஸ் நிறுவனத்தின் எம்ஹெச்370 விமானத்தைத் தேடும் பணி மீண்டும் நடைபெறவுள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை அந்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்டனி லோக் வெளியிட்டுள்ளார்.

எம்ஹெச்370 விமான தேடுதலில் மீண்டும் ஈடுபட கடல் ஆய்வில் ஈடுபடும் அமெரிக்காவின் ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் முன்வந்துள்ளது.

”நிறுவனத்தின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளதால் புதிய தேடுதல் வேட்டைக்கு ஒப்புதல் தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேடுதல் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற பேச்சுவார்த்தையில் இதுவரை நாங்கள் ஈடுபடவில்லை” என்று ஆண்டனி லோக் தெரிவித்தார்.

மலேசிய விமானத்தை மீண்டும் தேடும் பணிக்கு கடந்த டிசம்பரில் மலேசிய அரசு ஒப்புதல் அளித்தது.

கடந்த 2014-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 8-ஆம் தேதி 239 பயணிகளுடன், கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகருக்கு எம்ஹெச்370 விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்திய பெருங்கடல் பகுதியை கடக்கும்போது அந்த விமானம் திடீரென மாயமானது.

அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாகவும், அதிலிருந்த அனைவரும் உயிரிழந்ததாகவும் பின்னா் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது.

விமானத்துறையின் வரலாற்றில் மிகப்பெரிய தேடுதல் வேட்டையில் இன்று வரை அந்த விமானம் கண்டுபிடிக்கப்படவில்லை.

சுமாா் 1,20,000 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு கொண்ட கடல்பகுதியில் அந்த விமான பாகங்களைத் தேடும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் இருந்து, விமானங்களைக் கண்டறியும் பிரபல கப்பல் நிறுவனமும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. ஆனால், விமான பாகங்கள் எவற்றையும் அது கண்டுபிடிக்கவில்லை.

இந்த நிலையில், தேடுதல் வேட்டையில் விமான பாகங்கள் கிடைத்தால் மட்டுமே மலேசிய அரசிடமிருந்து பணம் பெற்றுக்கொள்வதாகவும், முயற்சி தோல்வியடைந்தால் தேடுதல் செலவு முழுவதையும் தானே ஏற்றுக்கொள்ளவும் ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் சம்மதித்திருந்தது.


விமானத்தைக் கண்டுபிடித்தால் இந்திய மதிப்பில் ரூ. 61 கோடி வரை சன்மானம் வழங்கப்படும் என்று மலேசிய அரசு தெரிவித்திருந்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு தேடுதல் வேட்டையைத் தொடங்கிய அந்த நிறுவனத்தின் முயற்சி தோல்வியில் முடிந்தது. கடந்தாண்டு மீண்டும் தேடலைத் தொடங்குவதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால், தொடர்ந்து எந்த முயற்சியிலும் விமான பாகங்கள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், இந்தாண்டு மீண்டும் அதிநவீன கப்பல்களுடன் காணாமல் போன விமானத்தைத் தேடித் தர ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் முன்வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com