அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு: சட்டவிரோத குடியேற்றம் குறித்து பேச்சு

அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்.
அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்.
Published on
Updated on
1 min read

நியூயார்க்: அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

அப்போது அமெரிக்காவில் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறும் விவகாரத்தில் கவனம் செலுத்துவதற்கு இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற டிரம்ப் நிர்வாகம் விரும்புவதாக மார்கோ தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து, தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

இந்தியா-அமெரிக்கா இடையிலான கூட்டுறவை தொடர்ந்து வலுப்படுத்துவது குறித்து இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் பேசினர்.

புதிதாக உருவாகி வரும் தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு ஒத்துழைப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இந்திய, அமெரிக்கா உறவை மேலும் வலிமையாக்குவதற்கான வாய்ப்புகள், இந்திய-பசிபிக் பிராந்தியத்தை மேலும் தடையற்றதாக்குதல், பிராந்திய விவகாரங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவை மேம்படுத்தவும், அமெரிக்காவில் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறும் விவகாரத்தில் கவனம் செலுத்தவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற டிரம்ப் நிர்வாகம் விரும்புவதாக மார்கோ தெரிவித்தார்.

'க்வாட்' அமைச்சர்கள் கூட்டம்: மார்கோ- ஜெய்சங்கர் சந்திப்புக்கு முன்பாக வாஷிங்டனில் 'க்வாட்' கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து அந்த அமைச்சர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், 'இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சுமுக நிலையை வலுக்கட்டாயமாக மாற்றும் எந்தவொரு ஒருதலைப்பட்சமான நடவடிக்கையையும் (இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அடாவடி போக்கு மறைமுகமாக விமர்சிக்கப்பட்டது) 'க்வாட்' கூட்டமைப்பு வலுவாக எதிர்க்கிறது.

பிராந்திய கடல்சார், பொருளாதார மற்றும் தொழில்நுட்பப் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், நம்பகமான மற்றும் வலிமையான விநியோக முறைகளை மேம்படுத்துவதிலும் 'க்வாட்' உறுதியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

க்வாட் கூட்டமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

குடியுரிமை கட்டுப்பாடு: இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் எதிர்ப்பு

வாஷிங்டன், ஜன. 22: அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் வெளிநாட்டவருக்கு குடியுரிமை வழங்கப்படாது என்ற அதிபர் டிரம்ப்பின் உத்தரவுக்கு இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக எம்.பி. ரோ கன்னா கூறியதாவது: அதிபர் டிரம்ப்பின் உத்தரவு ஹெச்-1பி, ஹெ-2பி போன்ற விசாக்களை பெற்று அமெரிக்காவில் சட்டபூர்வமாக பணியாற்றும் வெளிநாட்டவரின் குழந்தைகளையும் பாதிக்கும் என்றார்.

எம்.பி. ஸ்ரீ தானேதர் கூறுகையில், 'பிறப்புரிமை குடியுரிமை அமெரிக்காவின் சட்டமாக எப்போதும் இருக்கும். அந்த நிலையைப் பாதுகாக்க நான் போராடுவேன்' என்றார்.

எம்.பி. பிரமிளா ஜெயபால் கூறுகையில், 'பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்வது அமெரிக்க அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இந்த உத்தரவு அமெரிக்க சட்டங்களை கேலிக்கூத்தாக்கும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com