
அமெரிக்கா மீதான இறக்குமதி வரிகளைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது இந்தியா விதிக்கும் வரி குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார். அதிக வரி பற்றி தான் அம்பலப்படுத்தியதால் இந்தியா அதனைக் குறைக்க ஒப்புக்கொண்டதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் பேசிய அவர், “இந்தியா நம்மிடம் மிக அதிகமான வரிகளை வசூலிக்கிறது. இந்தியாவில் நீங்கள் எந்தப் பொருளையும் விற்க முடியாது. அந்த அளவிற்கு மிகவும் அதிகமான வரி வசூலிக்கப்படுகிறது.
ஆனால், அவர்களின் அதிக வரி குறித்து யாரோ ஒருவர் (டிரம்ப்) அம்பலப்படுத்தியதால் ஒருவழியாக அதனைக் குறைக்க தற்போது ஒப்புக்கொண்டுள்ளனர்” என டிரம்ப் தெரிவித்தார்.
இந்தியாவின் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்காவின் தொழில்துறை செயலாளர் ஹோவர்ட் லூட்னிக் உடன் இன்று வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில் டொனால்ட் டிரம்ப் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி பால் பொருள்கள், மரக்கட்டைகள் இறக்குமதிக்கு கனடா அதிக வரி விதிப்பது குறித்துப் பேசிய டொனால்ட் டிரம்ப் கனடா மீது அதே அளவில் வரி விதிப்போம் என்று தெரிவித்தார்.
”கனடா, மெக்ஸிகோ, இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் அமெரிக்காவிடம் இருந்து அனைத்தையும் பறித்துக் கொள்கிறார்கள்.
கனடா வரிகளைக் குறைக்காவிட்டால் அவர்கள் குறைக்கும் வரை நாங்கள் அதே அளவிலான வரிகளை விதிக்கவுள்ளோம். வருகிற திங்கள் அல்லது செவ்வாய் (மார்ச். 10, 11) வரை காத்திருப்போம்” எனக் கூறியுள்ளார்.
கனடா, மெக்ஸிகோவின் கணிசமான பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரிவிதிப்பை டிரம்ப் தற்போது தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.