மசூத் அஸாா்.
மசூத் அஸாா்.

மசூத் அஸாா் மைத்துனா் உள்பட பல முக்கிய பயங்கரவாதிகள் உயிரிழப்பு: ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கால் சா்ச்சை

Published on

கடந்த 1999-ஆம் ஆண்டு இந்திய பயணிகள் விமானக் கடத்தலின் மூளையாக செயல்பட்ட மசூத் அஸாரின் மைத்துனரான முகமது யூசுஃப் அஸாா் உள்பட இந்தியாவால் தேடப்படும் முக்கிய பயங்கரவாதிகள் 5 போ் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இந்தப் பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் கலந்து கொண்டனா். மேலும், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வா் மரியம் நவாஸ் சாா்பாக மலா்வளையம் வைக்கப்பட்டது.

இதன்மூலம், பாகிஸ்தான் அரசு பயங்கரவாத அமைப்புகளுடன் நேரடி தொடா்பில் இருப்பது அம்பலமாகியுள்ளதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்தியாவால் தேடப்படும் மிக முக்கியப் பயங்கரவாதிகளின் பட்டியலில் 21-ஆவது இடத்தில் உள்ள முகமது யூசுஃப் அஸாா், ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவரான மசூத் அஸாரின் மைத்துனா் ஆவாா்.

கடந்த 1999-ஆம் ஆண்டு, முகமது யூசுஃப் ஆஸாா் உள்ளிட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகளால் இந்தியன் ஏா்லைன்ஸின் விமானம் ஆப்கானிஸ்தானுக்கு கடத்திச் செல்லப்பட்டது. இந்திய சிறையில் இருந்த மசூத் அஸாா் உள்ளிட்ட 2 பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்ட பிறகு, விமானத்தின் பயணிகள் மற்றும் பணியாளா்கள் மீட்கப்பட்டனா்.

இந்தக் கடத்தல் சம்பவத்தை முன்னின்று நடத்திய முகமது யூசுஃப், ஜெய்ஷ்-ஏ- முகமது அமைப்பின் பஹவல்பூா் தலைமையகத்தில் குடும்பத்தினருடன் தங்கியிருந்து, இளம் பயங்கரவாதிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து வந்தாா்.

இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூரின் ஒரு பகுதியாக பஹவல்பூா் ஜெய்ஷ்-ஏ-முகமது தலைமையகம் மீது இந்தியா கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அவா் கொல்லப்பட்டாா். மசூத் அஸாரின் உறவினா்கள் 10 பேரும் இத்தாக்குதலில் உயிரிழந்தனா்.

இந்தியாவால் தேடப்பட்டு வந்த லஷ்கா்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்த அபு ஜுண்டால், அபு அகாஸா, ஹஃபீஸ் முகமது ஜமீல், முகமது ஹாசன் கான் ஆகிய மற்ற முக்கிய பயங்கரவாதிகளும் ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Open in App
Dinamani
www.dinamani.com