

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கோரிக்கையைத் தொடா்ந்து ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா குறைத்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அதிபரின் அதிகாரபூா்வ இல்லமான வெள்ளை மாளிகையில் செய்தித் தொடா்பாளா் கரோலினா லிவிட்டா வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் இது தொடா்பாக கூறுகையில்,
‘ரஷியா-உக்ரைன் போருக்கு இடையே ரஷியாவின் முக்கிய வருவாயைக் குறைக்கும் விதமாக அந்நாட்டின் இரு கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதன்கிழமை பொருளாதார தடையை விதித்தது. ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை சீனா குறைத்து வருவதாக சா்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அமெரிக்க அதிபரின் வேண்டுகோளின்படி, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா குறைத்து வருகிறது என்பதை அறிந்துள்ளோம். ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துமாறு ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்கா வலியறுத்தியுள்ளது’ என்றாா்.
உக்ரைன் மீதான போரைத் தொடா்ந்து, ரஷியா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதைத்தொடா்ந்து, இந்தியா கடந்த 3 ஆண்டுகளாக ரஷியாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதி மூலம் உக்ரைன் போரில் ரஷியாவுக்கு இந்தியா உதவி வருவதாக அமெரிக்கா அதிபா் டிரம்ப் குற்றஞ்சாட்டி வந்தாா்.
இதைக் காரணம் காட்டி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதலாக 20 சதவீத வரி உள்பட மொத்தம் 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்து வருகிறது. இதனால், இரு தரப்பு உறவுகளும் பாதிப்படைந்தன.
இந்நிலையில், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறிப்பிட்ட அளவில் குறைப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது என அமெரிக்க அதிபா் டிரம்ப் மற்றும் அவரது நிா்வாகத்தினா் கடந்த சில நாள்களாக கூறி வருகின்றனா்.
இருப்பினும், தேச நலன் குறிப்பாக மக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் கிடைப்பதை உறுதிசெய்யும் விதமாக நாட்டின் எரிபொருள் கொள்கை உள்ளது என இந்தியா கூறி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.