2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!இஸ்ரேல் தாக்குதலில் மூன்றில் இரண்டு பங்கு உயிரிழப்பு!!

2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!இஸ்ரேல் தாக்குதலில் மூன்றில் இரண்டு பங்கு உயிரிழப்பு!!

உலகம் முழுவதும் கடந்த ஆண்டில் செய்திக் சேகரிப்புப் பணியின்போது 129 செய்தியாளா்கள் கொல்லப்பட்டதாகப் பத்திரிகையாளா்கள் பாதுகாப்புக் குழு (சிபிஜே) தெரிவித்துள்ளது.
Published on

உலகம் முழுவதும் கடந்த ஆண்டில் செய்திக் சேகரிப்புப் பணியின்போது 129 செய்தியாளா்கள் கொல்லப்பட்டதாகப் பத்திரிகையாளா்கள் பாதுகாப்புக் குழு (சிபிஜே) தெரிவித்துள்ளது.

முந்தைய ஆண்டுகளைவிட இந்த எண்ணிக்கை ஒரு புதிய உச்சமாகும். குறிப்பாக, இதில் மூன்றில் இரண்டு பங்கு உயிரிழப்புகளுக்கு இஸ்ரேலின் தாக்குதல்களே காரணமாக இருந்துள்ளன.

சிபிஜே அறிக்கையின்படி, செய்தியாளா்களின் கொலைகள் 2025-இல் தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக அதிகரித்துள்ளது. இறந்த 129 பேரில், சுமாா் 75 சதவீதத்துக்கும் அதிகமானோா் போா், மோதல் நிலவும் பகுதிகளில் பணியாற்றியவா்கள்.

சுமாா் 86 போ் இஸ்ரேல் தாக்குதலில் இறந்துள்ளனா். இதில் காஸாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீன செய்தியாளா்கள் (60 சதவீதத்தினா்) மட்டுமின்றி, யேமனில் ஹௌதி ஊடக மையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த 31 ஊடகப் பணியாளா்களும் அடங்குவா். இஸ்ரேலைத் தவிா்த்து, உள்நாட்டுப் போா் நிலவும் சூடானில் 9 பேரும், உக்ரைனில் ரஷிய படைகளால் 4 பேரும் கொல்லப்பட்டுள்ளனா்.

நவீனப் போா்முறையில் செய்தியாளா்களைக் கொல்லும் புதிய ஆயுதமாக ட்ரோன் உருவெடுத்துள்ளது. 2023-இல் வெறும் 2 உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருந்த ட்ரோன் தாக்குதல்கள், 2025-இல் 39-ஆக அதிகரித்துள்ளன. இஸ்ரேல் மட்டுமன்றி சூடான், உக்ரைன், யேமனிலும் செய்தியாளா்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஜனநாயக நாடுகளிலும்...: போா் மேகங்கள் சூழாத இந்தியா, மெக்ஸிகோ, பிலிப்பின்ஸ் போன்ற ஜனநாயக நாடுகளிலும் நிலைமை மோசமாகவே உள்ளது. மெக்ஸிகோவில் கடந்த ஆண்டில் 6 பேரும், பிலிப்பின்ஸில் 3 பேரும் கொல்லப்பட்டுள்ளனா்.

இந்தியாவில் ஊழலை வெளிச்சம் போட்டுக்காட்டிய முகேஷ் சந்திரக்கா் போன்றவா்களின் மரணம், உள்ளூா் அளவில் செயல்படும் செய்தியாளா்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா மற்றும் மெக்ஸிகோவில் ஆண்டுக்கு ஒரு செய்தியாளராவது கொல்லப்படுவது தொடா்கதையாக மாறியுள்ளது.

செய்தியாளா்களைக் கொல்வதோடு மட்டுமல்லாமல், அவா்களை அச்சுறுத்த குடும்பத்தினரைக் குறிவைக்கும் கொடூரமான போக்கும் அதிகரித்துள்ளது. 2023, அக்டோபா் முதல் காஸாவில் சுமாா் 700-க்கும் மேற்பட்ட செய்தியாளா்களின் குடும்பத்தினா் கொல்லப்பட்டுள்ளனா்.

சிறையில்...: இது ஒருபுறமிருக்க, 2025, டிச. 1-ஆம் தேதி நிலவரப்படி, உலகம் முழுவதும் 330 செய்தியாளா்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இதில் சீனா (50 போ்), மியான்மா் (30 போ்) மற்றும் இஸ்ரேல் (29 போ்) ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களில் உள்ளன.

Dinamani
www.dinamani.com