

எப்ஸ்டீன் கோப்புகளில் சர்ச்சையில் சிக்கிய உலகப் பொருளாதார மன்றத் தலைவர் போர்கே பிரென்ட் பதவி விலகினார்.
எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சையில், ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாக உலகப் பொருளாதார மன்றத் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான போர்கே பிரென்ட் மீது குற்றம் சாட்டப்பட்டது.
எப்ஸ்டீனுடன் வணிக ரீதியான இரவு விருந்துகளில் கலந்து கொண்டதாகவும், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் தொடர்பில் இருந்ததாகவும் போர்கே மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இதுகுறித்து விசாரிக்க விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது.
குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, உலகப் பொருளாதார மன்றத் தலைவர் பதவியை போர்கே ராஜிநாமா செய்தார். இவர் 2017 ஆம் ஆண்டுமுதல் தலைவர் பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில், தனது பதவி விலகல் குறித்து போர்கே பேசுகையில், உலகப் பொருளாதார மன்றம் எவ்வித இடையூறுமின்றி தொடர்ந்து பணியாற்ற வேண்டும். அதற்காகவே நான் பதவி விலகும் முடிவை எடுத்துள்ளேன். கடந்த 8.5 ஆண்டுகளாக இந்தப் பதவியில் பணியாற்றியதில் எனக்கு மிகவும் திருப்தி என்று தெரிவித்தார்.
போர்கேவின் பதவி விலகலைத் தொடர்ந்து, உடனடியாக அலோயிஸ் ஸ்விங்கி இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பெரும் பணக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறுமிகளைக் கடத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக, கைது செய்யப்பட்டு சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அமெரிக்க நீதித் துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள், தலைவர்கள் எப்ஸ்டீனுடன் பகிர்ந்த விடியோக்கள், புகைப்படங்கள், மின்னஞ்சல்கள் குறித்த தரவுகள் வெளியாகி உலகளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.