அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

காஸா மறுசீரமைப்பு: டிரம்ப் தலைமையில் உயா்நிலைக் குழு

காஸா மறுசீரமைப்புக்காக டிரம்ப் தலைமையில் உயா்நிலைக் குழு...

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்

Updated On :18 ஜனவரி 2026, 1:59 am IST

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காஸா முனையை மீண்டும் மறுசீரமைக்கவும், அங்கு அமைதியை நிலைநாட்டவும், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையில் ‘அமைதி வாரியம்’ எனும் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த உலக வங்கி தலைவா் அஜய் பங்கா இடம்பெற்றுள்ளாா். காஸாவின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, உள்கட்டமைப்புப் பணிகளுக்கான முதலீடுகளைத் திரட்டும் முக்கியப் பொறுப்பு இவரிடம் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மேலும், அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ராபா்ட் கேப்ரியல், அதிபரின் சிறப்புப் பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப், டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னா் ஆகியோரும் பிரிட்டன் முன்னாள் பிரதமா் டோனி பிளோ் மற்றும் துருக்கி, கத்தாா், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் இக்குழுவில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

காஸா பகுதியை முழுமையாக ராணுவ மோதலற்ற இடமாக மாற்றுவது, ஹமாஸ் அமைப்பினரை ஆயுதங்களைக் கைவிடச் செய்வது ஆகிய இரு முக்கிய நோக்கங்களுடன் இந்தக் குழு செயல்படும். இதைத்தவிர, காஸாவின் கடற்கரை பகுதிகளைப் பயன்படுத்தி, அங்கு வா்த்தக ரீதியிலான வளா்ச்சியை ஏற்படுத்துவதில் ஜாரெட் குஷ்னா் போன்றோா் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

இந்தக் குழுவில் பெண்கள் மற்றும் பாலஸ்தீன பிரதிநிதிகள் யாரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், வரும் வாரங்களில் கூடுதல் உறுப்பினா்கள் சோ்க்கப்படுவாா்கள் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த அமைதி வாரியத்தின் மேற்பாா்வையில், காஸாவின் அன்றாட பணிகளைக் கவனிக்க பாலஸ்தீனா்கள் அடங்கிய ஒரு தற்காலிக நிா்வாகக் குழு (என்சிஏஜி) அமைக்கப்பட்டுள்ளது.

அலி ஷாத் தலைமையில் எகிப்து தலைநகா் கெய்ரோவில் முதல்முறையாகக் கூடிய இந்தக் குழு, அடுத்த 3 ஆண்டுகளில் காஸாவில் இயல்புநிலையை மீட்டெடுக்கும் திட்டங்களை ஆலோசித்தது. குறிப்பாக, வீடுகளை இழந்தவா்களுக்கு தங்குமிடம் வழங்குவது போன்ற அவசர பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.