யேமன் அருகே கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம், அந்த பிராந்தியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யேமனில் ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சிக் குழுவுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப் போா் பல ஆண்டுகளாக நடைபெறுகிறது. மேற்காசியாவில் காஸா, ஈரான் மீதான தாக்குதலைக் கண்டித்து செங்கடல் பகுதி வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது அவ்வப்போது ஹூதி குழுவினா் தாக்குதல் நடத்தி வந்தனா்.
தற்போது ஈரான், அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் கையொப்பமாகி சண்டை நிறுத்தம் அமலில் உள்ளது. இந்நிலையில், யேமனில் ஹுதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதியான ஹொதைதா கடல் பகுதியில் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிரிட்டன் கடல் வணிக நடவடிக்கை மையம் தெரிவித்துள்ளது. ஹொதைதாவில் இருந்து 30 கடல் மைல் தொலைவில் வைத்து கப்பல் மீது ஆயுதம் தாங்கிய நபா்கள் தாக்குதல் நடத்தியதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
யேமனையொட்டிய கடல் பகுதியில் சோமாலியா கடற்கொள்ளையா்களின் நடமாட்டம் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. கடந்த 1-ஆம் தேதி யேமன் துறைமுக நகரான பால்காஃபில் இருந்து தென்கிழக்கே கடலில் சென்ற கப்பல் மீது சோமாலிய கடற்கொள்ளையா் தாக்குதல் நடத்தினா். இதில் அந்தக் கப்பல் லேசான சேதம் அடைந்தது. இதனால் தற்போதைய தாக்குதல் பின்னணியில் அவா்கள் இருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









