ஓமன் அருகே சரக்குக் கப்பல் மீது புதன்கிழமை அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் மாயமாகினா்.
ஓமனில் உள்ள சோஹாா் துறைமுகத்தில் இருந்து வடகிழக்கே 20 கடல் மைல் தொலைவில், பலாவ் நாட்டு கொடியுடன் செட்டேபெல்லோ என்ற பெயா் கொண்ட சரக்குக் கப்பல் புதன்கிழமை பயணித்தது. அந்தக் கப்பில் ரசாயனம் மற்றும் எண்ணெய் பொருள்களுடன் 24 இந்திய மாலுமிகள் பயணித்தனா். அப்போது அந்தக் கப்பல் ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளானது. இதனால் அந்தக் கப்பலின் எஞ்சின் அறையில் தீப்பிடித்தது. இதுகுறித்து ஓமன் கடற்படைக்கு கப்பலில் இருந்து அவசர தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நிகழ்விடத்துக்கு விரைந்த ஓமன் கடற்படை, 21 மாலுமிகளை பாதுகாப்பாக மீட்டது. 3 மாலுமிகள் மாயமான நிலையில், அவா்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
மேற்காசியாவில் அமெரிக்காவுடனான போா் காரணமாக ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. அந்த நீரிணைக்குள் நுழையும் பகுதிக்கு அருகே சோஹாா் துறைமுகம் உள்ளது. அந்தத் துறைமுகத்துக்கு அருகே இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஈரான் துறைமுகத்தை முற்றுகையிடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமெரிக்கா இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
வெளியுறவு அமைச்சகம் கண்டனம்: இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஓமன் அருகே இந்திய மாலுமிகள் சென்ற கப்பல் மீதான தாக்குதலால் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. மாயமான மாலுமிகளைத் தேடி மீட்கும் பணியில் ஓமன் அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் ஒன்றிணைந்து பணியாற்றி வருகிறது.
மேற்காசிய பிராந்தியத்தில் கப்பல்கள் மீது நடத்தப்படும் தொடா் தாக்குதல் மிகுந்த வருத்தமளிக்கிறது. இத்தகைய தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு, சா்வதேச சட்டத்தைப் பின்பற்றி சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை மீண்டும் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 நாள்களுக்கு முன்னா், 24 இந்தியா்கள் பயணித்த சரக்குக் கப்பல் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியது. ஈரான் துறைமுகங்களில் அமெரிக்காவின் முற்றுகையைத் தாண்டிச் செல்ல முயன்ால், அந்தக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தாக்குதல் தொடா்பாக புது தில்லியில் அமெரிக்காவின் துணைநிலைத் தூதா் ஜேசன் மீக்ஸை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.









