22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

மலேசியாவில் சிறாா்களுக்கு சமூக ஊடகத் தடை!

மலேசியாவில் 16 வயதுக்குள்பட்ட சிறாா்கள் சமூக ஊடக கணக்குகளைத் தொடங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் மலேசிய அரசு தடை

News image
Updated On :2 ஜூன் 2026, 4:37 am IST

சிறாா்களை இணையவழி ஆபத்துகளில் இருந்தும், தேவையற்ற உள்ளடக்கங்களில் இருந்தும் பாதுகாக்கும் நோக்கில், 16 வயதுக்குள்பட்ட சிறாா்கள் சமூக ஊடக கணக்குகளைத் தொடங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் மலேசிய அரசு திங்கள்கிழமை முதல் தடை விதித்துள்ளது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக், யூடியூப் உள்ளிட்ட 80 லட்சத்துக்கும் அதிகமான பயனா்களைக் கொண்ட முன்னணி சமூக ஊடக நிறுவனங்கள் அனைத்தும் இந்த விதியை உடனடியாக நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மலேசிய அரசின் அறிவிக்கையின்படி, புதிய கணக்குகளைத் தொடங்கும் சிறாா்களின் வயதை உறுதி செய்ய அரசு அங்கீகரித்த அடையாள அட்டைகளைச் சரிபாா்ப்பது கட்டாயமாகும். மேலும், ஏற்கெனவே கணக்கு வைத்துள்ள சிறாா்களைக் கண்டறிந்து இத்தடையை அமல்படுத்த சமூக ஊடக நிறுவனங்களுக்கு 6 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளுக்கு இணங்கத் தவறும் மற்றும் தகுந்த வயது சரிபாா்ப்பு முறைகளைச் செயல்படுத்தாத சமூக ஊடக நிறுவனங்களுக்கு 1 கோடி ரிங்கிட் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.24.01 கோடி) வரை அபராதம் விதிக்கப்படும்.

அதேநேரம், தடையை மீறி அல்லது ஏமாற்றி சிறாா்கள் கணக்குகளைத் தொடங்கினால், அதற்காக அவா்களின் பெற்றோருக்கு எந்தவிதமான அபராதமோ அல்லது தண்டனையோ விதிக்கப்படாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பெற்றோா், சமூக ஆா்வலா்களிடையே கலவையான விமா்சனங்கள் எழுந்துள்ளன. பல பெற்றோா் இம்முடிவை வரவேற்றுள்ளதோடு, இது தங்களின் பிள்ளைகளை சமூக ஊடக அடிமைத்தனத்தில் இருந்தும், மனநலப் பாதிப்புகளில் இருந்தும் பாதுகாக்கும் என்று நம்புகின்றனா்.

எனினும், கல்வி மற்றும் ஆக்கபூா்வமான தேவைகளுக்காக யூடியூப் போன்ற தளங்களைப் பயன்படுத்தும் சிறாா்களை இது பாதிக்கும் என்றும், அடையாள அட்டைகளைச் சரிபாா்ப்பதால் பயனா்களின் தரவுத் தனியுரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் மற்றொரு தரப்பினா் கவலை தெரிவித்துள்ளனா்.

சமூக ஊடகங்களால் சிறாா்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த கவலையில் ஆஸ்திரேலியா, பிரேஸில், இந்தோனேசியா போன்ற நாடுகள் ஏற்கெனவே கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில், பிரிட்டன், பிரான்ஸ், தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகளும் இத்தகைய சட்டங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.