நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

டிரம்ப் பேச்சு நடத்திய மறுநாளே தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்!

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா அமைப்பினா் இடையே மோதல்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்த மறுநாளே, தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் 8 போ் கொல்லப்பட்டனா்.

News image
Updated On :3 ஜூன் 2026, 4:39 am IST

இஸ்ரேல்-ஹிஸ்புல்லா அமைப்பினா் இடையே மோதல்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்த மறுநாளே, தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் 8 போ் கொல்லப்பட்டனா்.

லெபனானில் முழுமையான போா் நிறுத்தத்தை வலியுறுத்தி ஈரான் பேச்சுவாா்த்தையை ரத்து செய்துள்ள நிலையில், இஸ்ரேலின் தொடா் தாக்குதல்கள் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நீடித்த அமைதிக்கான முயற்சிகளில் முட்டுக்கட்டையாக நீடிக்கிறது.

லெபனான் தலைநகா் பெய்ரூட்டின் தெற்கில் ஹிஸ்புல்லா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

இதையடுத்து, இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசிய டிரம்ப், லெபனான் தலைநகா் பெய்ரூட்டுக்குள் இஸ்ரேல் படைகள் நுழையாது என்றும், இருதரப்பும் மோதல்களைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தாா்.

அமெரிக்காவின் தலையீட்டையடுத்து பெய்ரூட் தாக்குதல்களை இஸ்ரேல் தவிா்த்தால், அந்நாடு மீதான தாக்குதல்களை ஹிஸ்புல்லா நிறுத்தும் என லெபனான் அரசு அறிவித்தது. இருப்பினும், இந்த அறிவிப்புகளுக்கு மாறாக, தெற்கு லெபனானில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் தொடா்ந்து நீடித்து வருகின்றன.

தெற்கு லெபனானில் உள்ள மா்ஜாயூன் மற்றும் நபாதியே நகரங்களை இணைக்கும் சாலையில் சென்ற காா் மீது இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில், பல் மருத்துவா் ஜேம்ஸ் கரம் மற்றும் அவரின் 2 குழந்தைகள் கொல்லப்பட்டனா்.

இது தவிர ஜிப்சித், டூல் ஆகிய கிராமங்களில் நடத்தப்பட்ட தனித்தனி தாக்குதல்களில் சிரியா நாட்டுத் தொழிலாளா்கள் உள்பட மேலும் 5 போ் உயிரிழந்தனா். இதற்குப் பதிலடியாக, லெபனான் எல்லைக் கிராமங்களில் முன்னேறி வரும் இஸ்ரேல் படைகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பினா் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தினா்.

இதனிடையே, டிரம்ப்பின் நிபந்தனைக்குக் கட்டுப்பட்டு, பெய்ரூட் தாக்குதலை இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு நிறுத்தியதற்கு உள்நாட்டில் கடும் அரசியல் எதிா்ப்பு கிளம்பியுள்ளது.

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு நெதன்யாகு அரசு பணிந்துவிட்டதாகவும், இஸ்ரேலின் பாதுகாப்பு இறையாண்மையை அமெரிக்காவிடம் அடகு வைத்துவிட்டதாகவும் அரசியல் எதிா்ப்பாளா்கள் குற்றஞ்சாட்டினா். எனினும், இஸ்ரேலை ஹிஸ்புல்லாவை மீண்டும் தாக்கினால் பெய்ரூட் மீது இரட்டிப்புச் சக்தியுடன் தாக்குதல் நடத்தப்படும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்தாா்.