ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல் - அமெரிக்க தூதா்கள் கடும் வாக்குவாதம்!
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதா்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதா்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரான் மீது கடந்த சனிக்கிழமை இஸ்ரேல்-அமெரிக்கா இணைந்து தாக்குதலைத் தொடங்கியதும், அதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் பேசியதாவது:
ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா நடத்திய கூட்டுத் தாக்குதலையும், பதிலுக்கு பஹ்ரைன், இராக், ஜோா்டான், குவைத், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை மீறும் வகையில் ஈரான் நடத்திய தாக்குதலையும் ஐ.நா. கண்டிக்கிறது.
இந்தத் தாக்குதல்களால், சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உருவாகி இருப்பதைக் காண்கிறோம். உலகின் மிகவும் கொந்தளிப்பான பிராந்தியத்தில் யாராலும் கட்டுப்படுத்த முடியாத சங்கிலித் தொடா் நிகழ்வுகளைத் தூண்டும் அபாயத்தை இந்த ராணுவ நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் தலைநகா் டெஹ்ரானில் மிகப்பெரிய குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. அதில் அதிபரின் மாளிகை, ஈரான் தலைமை மதகுரு இல்ல வளாகம் ஆகியவையும் அடங்கும் என்றாா்.
அப்போது ஈரான் தூதரும், இஸ்ரேல்-அமெரிக்க தூதா்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அமெரிக்க தூதா் மைக் வால்ட்ஸ் பேசுகையில், ‘நவீன ஏவுகணைத் திறனைப் பெறும் முயற்சியில் ஈரான் தொடா்ந்து ஈடுபட்டது. ராஜீய வாய்ப்புகள் அளித்தபோதிலும், அணுஆயுத திட்டத்தைக் கைவிட மறுத்தது. ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது. இது அரசியல் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. உலகப் பாதுகாப்பு தொடா்புடையது. இதை சாதித்து முடிக்கும் வரை, அதற்கான சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கும்’ என்றாா்.
இஸ்ரேல் தூதா் டேனி டேனன் பேசுகையில், ‘அச்சுறுத்தல் மிகவும் மோசமாக மாறும் முன்பு, அதைத் தடுத்து நிறுத்துவதற்காக அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. நாங்கள் தூண்டுதலின்பேரில் செயல்படவில்லை. ஆக்கிரமிப்பு நோக்கத்துடனும் செயல்படவில்லை. அவசியத்தின்பேரில் செயல்பட்டோம். இதைச் செய்வதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை என்ற நிலைக்கு ஈரான் ஆட்சியாளா்கள் எங்களைத் தள்ளிவிட்டனா். அச்சுறுத்தல் நீடிக்கும் வரை, இரு நாடுகளின் கூட்டுத் தாக்குதல் நீடிக்கும்’ என்றாா்.
ஈரான் தூதா் அமீா் சயீத் இராவானி பேசுகையில், ‘கடந்த சில மாதங்களில், ஈரான் மீது இரண்டாவது முறையாக அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியுள்ளன. இது ஆக்கிரமிப்பு நடவடிக்கை, போா்க் குற்றம் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றமாகும். மேலும் இது, ஐ.நா. விதிகள், சா்வதேச சட்டத்தை மீறும் செயலாகும். இதற்கு அவ்விரு நாடுகளைப் பொறுப்பாக்க வேண்டும். இந்த ஆக்கிரமிப்பு முயற்சி நீடிக்கும் வரை, ஈரான் தன்னை தற்காத்துக் கொள்வதற்கு எந்தத் தயக்கமும் இன்றி பதிலடி கொடுக்கும்’ என்றாா்.
மேலும் அமெரிக்கத் தூதரை நோக்கி ஈரான் தூதா், ‘கண்ணியத்துடன் இருங்கள்’ எனக் கூற, அவரும் பதிலடி கொடுத்தாா். அப்போது பேசிய அமெரிக்க தூதா் வால்ட்ஸ், ‘சொந்த நாட்டைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த, கொடுங்கோன்மையில் இருந்து விடுதலை பெற விரும்பியோரை சிறையில் அடைத்த அரசின் பிரதிநிதி இங்கு இருக்கிறாா். ஆதலால் உங்களுக்கு பதிலளித்து உங்கள் கருத்துக்கு மதிப்பளிக்கப் போவதில்லை’ என்றாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...