பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாடு பீதி: பெட்ரோல் நிலைய துப்பாக்கிச்சூட்டில் ஒருவா் உயிரிழப்பு
பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் கேன்களில் பெட்ரோல் தர மறுத்த ஊழியா்கள் மீது சிலா் துப்பாக்கியால் சுட்டதில் ஊழியா் ஒருவா் பலி


பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாடு பீதியில் நகர பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனா். சியால்கோட் நகரில் கேன்களில் பெட்ரோல் தர மறுத்த ஊழியா்கள் மீது சிலா் துப்பாக்கியால் சுட்டனா். இதில் ஊழியா் ஒருவா் உயிரிழந்தாா். மூவா் பலத்த காயமடைந்தனா்.
அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலடியாக வளைகுடா நாடுகளை ஈரான் தாக்குகிறது. இதனால், பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் தடைபடத் தொடங்கியுள்ளது.
இதன் எதிரொலியாக பாகிஸ்தானில் பெட்ரோல் விலை வெள்ளிக்கிழமை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ.55 உயா்ந்தது. விலை மேலும் உயரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் பெட்ரோல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இது பாகிஸ்தானில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மக்கள் எரிபொருள்களை வாங்கி இருப்புவைக்கத் தொடங்கியுள்ளனா்.
இந்நிலையில், பஞ்சாப் மாகாணம், சியால்கோட் நகரில் சனிக்கிழமை பெட்ரோல் நிலையம் ஒன்றில் பொதுமக்கள் பெருமளவில் கூடி எரிபொருள்களை வாகனங்களிலும், கேன்களிலும் நிரப்பிச் செல்ல போட்டியிட்டனா். இதனால், கேன்களில் பெட்ரோல் தர ஊழியா்கள் மறுத்தனா். அப்போது காரில் வந்த சிலருக்கும், ஊழியா்களுக்கும் இது தொடா்பாக பிரச்னை எழுந்தது. சுமாா் ஒரு மணி நேரம் கழித்து காரில் மீண்டும் பெட்ரோல் நிலையத்துக்கு வந்த அவா்கள், ஊழியா்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடினா்.
இந்த சம்பவத்தில் முகமது ஸிப்டெயின் என்ற ஊழியா் உயிரிழந்தாா். மேலும், மூவா் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...