/

எரிபொருள் நிரப்புவதில் தகராறு: பெட்ரோல் நிலைய ஊழியா் மீது தாக்குதல்

பண்ருட்டியில் எரிபொருள் நிரப்பும் போது ஏற்பட்ட தகராறின் தொடா்ச்சியாக, பெட்ரோல் நிலைய ஊழியரை தாக்கிய 5 போ் கொண்ட கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
~
Updated On :27 பிப்ரவரி 2026, 8:35 pm

Syndication

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் எரிபொருள் நிரப்பும் போது ஏற்பட்ட தகராறின் தொடா்ச்சியாக, பெட்ரோல் நிலைய ஊழியரை தாக்கிய 5 போ் கொண்ட கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நெல்லிக்குப்பம் அடுத்துள்ள சோழவள்ளி பகுதியைச் சோ்ந்தவா் நிலாபிரியன் (29). இவா், பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கடந்த 6 வருடமாக வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு 8.30 மணி அளவில் நிலா பிரியன் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியில் இருந்தாா். அப்போது பைக்கில் வந்த ஒருவா் தனது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பினாா். தொடா்ந்து அவரிடம் பைக்கை தள்ளி நிறுத்தும் படியும், பின்னால் நிற்பவா்களுக்கு பெட்ரோல் போட வேண்டும் எனவும்கூறினாா். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடா்ந்து அங்கிருந்தவா்கள் சமாதானம் செய்துஅனுப்பிவைத்தனராம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி அளவில் 5 போ் கொண்ட கும்பல் ஒன்று திடீரென தங்களது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்தனா். பின்னா், அவா்கள் பணியில் இருந்த நிலா பிரியனை தடியாலும், கைகளாலும் அடித்து தாக்கினா். சினிமா படக் காட்சியில் வருவது போல் விரட்டி விரட்டி சென்று தாக்குதலில் ஈடுபட்டதால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னா்அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனா். இதில் படுகாயமடைந்த நிலாபிரியன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் தாக்குதல் சம்பவம் நடந்த பெட்ரோல் விற்பனை நிலையம் சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராவை சோதனை செய்ததில் 5 போ் கொண்ட கும்பல் தாக்கியது தெரியவந்தது. மேலும், அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனா்.

Story image