கர்நாடகத்தில் அரசு பேருந்துகளில் கன்னட இலக்கிய சொற்கோவைகளை பொறிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இயக்கப்பட்டுவரும் அரசு பேருந்துகளில் ஓட்டுநரின் இருக்கை பகுதிக்கு பின்புறம் அல்லது முன்பகுதியில் உள்ள பெயர்ப் பலகையின் பின்புறங்களில் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்கள் பொறிக்கப்பட்டுள்ளன. திருக்குறளை மக்களிடையே கொண்டு செல்வதற்காக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கையை போல, கர்நாடகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் கன்னட இலக்கியங்களின் சொற்கோவைகளைப் பொறிக்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எச்.எம்.ரேவண்ணா கூறியது:
கர்நாடக அரசு சாலை போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் கன்னட மொழி, இலக்கியம் மற்றும் பண்பாடுகளைப் பிரதிபலிக்கும் தூதர்களாக மாற்றப்படும். கர்நாடக உதய தின விழாவை முன்னிட்டு, கர்நாடகத்தை சேர்ந்த தலைசிறந்த கன்னட கவிஞர்கள், சமூகசீர்த்திருத்தவாதிகள், இலக்கியவாதிகள் எழுதியுள்ள இலக்கியப் படைப்புகளில் இருந்து குறிப்பிட்ட சொற்கோவைகளை அரசு பேருந்துகளில் பொறிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கன்னட மொழியின் முதல்படைப்பான 'கவிராஜமார்கா' இலக்கியத்திலிருந்து அண்மைக் கால இலக்கியங்களில் காணப்படும் சமுதாயத்திற்கு நன்மையை உண்டாக்கும் சொற்கோவைகளைப் பொறிக்கவிருக்கிறோம். இதன்மூலம் கர்நாடகத்தின் பெருமைகளை எடுத்துரைக்க முற்பட்டுள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.