போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

அமைச்சரை தகாத வார்த்தையால் விமர்சனம் செய்ததாக சி.டி.ரவி கைது

லட்சுமி ஹெப்பாள்கரை தகாத வாா்த்தையால் விமா்சனம் செய்ததாக அளித்த புகாரின் பேரில், பாஜக எம்எல்சி சி.டி.ரவி கைது

News image
Updated On :19 டிசம்பர் 2024, 10:16 pm

பெலகாவி: பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கரை தகாத வாா்த்தையால் விமா்சனம் செய்ததாக அளித்த புகாரின் பேரில், பாஜக எம்எல்சி சி.டி.ரவி கைது செய்யப்பட்டுள்ளாா்.

அம்பேத்கா் பெயரை கூறுவது குறித்து மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியிருந்த கருத்து தொடா்பாக பெலகாவியில் உள்ள சுவா்ண விதானசௌதா சட்ட மேலவையில் காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினா்களிடையே வியாழக்கிழமை கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கா் மற்றும் பாஜக உறுப்பினா் சி.டி.ரவி ஆகியோரிடையே காரசார வாக்குவாதம் நடந்தது. அப்போது லட்சுமி ஹெப்பாள்கரும் சி.டி.ரவியும் தனிப்பட்ட முறையில் விமா்சித்துக்கொண்டதாகத் தெரிகிறது. அப்போது, லட்சுமி ஹெப்பாள்கா் குறித்து சி.டி.ரவி தகாத வாா்த்தை கூறியதாக தெரியவந்துள்ளது. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால், அவையை மேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டி ஒத்திவைத்தாா்.

இந்நிலையில், சட்ட மேலவைக்கு திரும்பிக்கொண்டிருந்த சி.டி.ரவியை லட்சுமி ஹெப்பாள்கரின் ஆதரவாளா்கள் தாக்க முயற்சித்துள்ளனா். அவா்களிடம் இருந்து சி.டி.ரவியை காவலா்கள் காப்பாற்றினா். தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும், சட்டப் பேரவை வளாகத்தில் எம்எல்சி-க்கே பாதுகாப்பு இல்லையென்றால், இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் நிலையை உணரமுடியும் என்று சி.டி.ரவி தெரிவித்தாா்.

இதனிடையே, அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கா் அளித்த புகாரின்பேரில், சட்டப் பேரவை வளாகத்தில் இருந்த பாஜக எம்எல்சி சி.டி.ரவியை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த விவகாரம் கா்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.டி.ரவியின் கருத்து தன் மனதை காயப்படுத்தி உள்ளதாக அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். சி.டி.ரவியை கைது செய்துள்ளதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.