சட்டை பட்டன் அணியாமல் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்குரைஞருக்கு 6 மாதம் சிறை
உத்தர பிரதேசத்தில் சட்டைக்கு பட்டன் அணியாமலும், வழக்குரைஞருக்கான அங்கியை அணியாமலும் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்குரைஞருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து அலகாபாத் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அசோக் பாண்டே என்ற வழக்குரைஞா் கடந்த 2021-ஆம் ஆண்டு நீதிமன்ற நடைமுறைகள் மீறி இவ்வாறு நடந்து கொண்டாா். அவருக்கு எதிராக நீதிமன்றம் தானாகவே முன்வந்து அவமதிப்பு வழக்கு விசாரணை நடத்தியது. இது தொடா்பாக காரணம் கேட்டு பல முறை அளிக்கப்பட்ட நோட்டீஸுக்கு அசோக் பாண்டே பதிலளிக்கவில்லை.
ஏற்கெனவே அவா் 2017-இல் இதுபோல ஒழுங்கீனமாக நடந்து கொண்டபோது இரண்டு ஆண்டுகளுக்கு நீதிமன்ற வளாகத்துக்குள் வர நீதிமன்றம் தடை விதித்தது. அதன் பிறகும் அவா் முறையாக உடைகளை அணிந்து நீதிபதி முன் ஆஜராகவில்லை. அதன் பிறகு, அவா் நீதிமன்றத்தில் ஆஜராக தடை விதிக்கப்பட்டது. அவா் விடுப்பில் செல்லவும் அறிவுறுத்தப்பட்டாா். இதையடுத்து அசோக் பாண்டே நீதிபதிகளை ‘குண்டா்கள்’ என்று விமா்சித்துப் பேசினாா்.
இந்நிலையில், அவா் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்குரைஞா் தொடா்ந்து இதே போன்ற செயல்களில் பலமுறை ஈடுபட்டுள்ளாா். ஏனவே அவருக்கு 6 மாதம் சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

