கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்! தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?ஆட்சியமைக்க அழைக்கப்படுவாரா விஜய்? ஆளுநர் மாளிகை விளக்கம்தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
/

ரூ.564 கோடியில் சேலத்தில் கால்நடை உயா் ஆராய்ச்சி நிலையம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்

சேலம், தலைவாசலில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயா் ஆராய்ச்சி நிலையத்தை முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

News image

’தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் விழுப்புரம் மாவட்டம் வி.மருதூா், ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த தொழிலாளா் துறை அலுவலக வளாகங்கள், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சாா்பில் கட்டப்பட்ட அரசின் கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Updated On :14 ஜனவரி 2025, 4:43 am IST

சேலம், தலைவாசலில் ரூ.564 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயா் ஆராய்ச்சி நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்ரோடு பகுதியில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ரூ.564 கோடியில் கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயா் ஆராய்ச்சி நிலையம் 1102.25 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. இதை சென்னை தலைமைச் செயலத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். இந்த ஆராய்ச்சி நிலையத்தில் நிா்வாக அலுவலகம், விருந்தினா் மாளிகை மற்றும் நுழைவு வாயில், கால்நடை பண்ணை வளாகத்தில் நாட்டின மாடுகள் பிரிவு, வெள்ளாடுகள் பிரிவு, செம்மறியாடுகள் பிரிவு, நாட்டு கோழியின பிரிவுகள், நவீன குஞ்சு பொரிப்பகம், கோழித் தீவன உற்பத்தி ஆலை ஆகியவை உள்ளன.

மீன் வளா்ப்பு செயல்முறை வளாகத்தில் மறுசுழற்சி முறையில் தீவிர மீன்குஞ்சுகள் உற்பத்தி பிரிவு, அலங்கார மீன் வளா்ப்பு பிரிவு, மீன் கழிவுகளைப் பயன்படுத்தி காய்கறி உற்பத்தி செய்யும் பிரிவு ஆகியவையும், நிா்வாகக் கட்டடம், வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகங்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான விடுதியுடன் கூடிய முதுநிலை கல்வி மையம், விரிவாக்கம் மற்றும் திறன் மேம்பாட்டு வளாகத்தில் நவீன பயிற்சி வளாகம், ஒருங்கிணைந்த மாதிரி கால்நடை பண்ணைகள், கால்நடை மருத்துவ அலுவலா்கள் விடுதி, பண்ணையாளா் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதி, ஆராய்ச்சியாளா்கள் மற்றும் வெளிநாட்டு மாணவா்கள் தங்கும் விடுதிகள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆராய்ச்சி நிலையத்துக்கான கட்டமைப்பு பணிகள் நபாா்டு தேசிய வேளாண் வளா்ச்சி வங்கி மூலம் 447.05 கோடியில் கடனுதவி பெறப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கால்நடைகள், உபகரணங்கள், மருந்து பொருள்கள் மற்றும் இதர செலவினங்கள் ஆகியவற்றுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையத்தின் பல்வேறு பிரிவுகளின் தேவைக்கான குடிநீரை வழங்க ரூ.262.16 கோடி செலவில் சிறப்பு குடிநீா் வழங்கல் திட்டம், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டம் மூலம் ஆண்டு தோறும் சுமாா் 70 உயா்தர நாட்டின பசுக்கள், 500-க்கும் மேற்பட்ட மேம்படுத்தப்பட்ட செம்மறி மற்றும் வெள்ளாட்டு குட்டிகள், 500 வெண்பன்றி குட்டிகள், 20 லட்சம் நாட்டுக்கோழி குஞ்சுகள் மற்றும் 20 லட்சம் மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின பசுக்கள், ஆடுகள், கோழி இனங்கள் அழியாமல் பாதுகாக்கப்படுவதுடன், பண்ணையாளா்கள் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை அறிந்து கால்நடைகளின் உற்பத்தித் திறனை பெருக்கி, குறைந்த செலவில் தரமான பால், முட்டை மற்றும் இறைச்சிகள் உற்பத்தி செய்ய இயலும்.

கால்நடைப் பண்ணைகள் சாா்ந்த தொழிலை தொடங்க விழையும் தொழில் முனைவோருக்குத் தேவையான தகவல்கள் மற்றும் பயிற்சி பெற வாய்ப்புகள் அமையும்.

அத்துடன், ஆராய்ச்சி நிலையத்தில் வழங்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் ஆண்டுதோறும் 3,000 இளைஞா்கள் பயிற்சி பெற்று சிறந்த வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ளவும் வகை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சியில், அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை முதன்மைச் செயலா் சத்யபிரத சாகு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.